புளியந்தீவு தெற்கு சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு 08ம் நாள் அஞ்சலி…

கடந்த 21ம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலினால் கொல்லப்பட்ட உறவுகளின் 08ம் நினைவையொட்டி மட்டக்களப்பில் பல்வேறு அஞ்சலி நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வகையில் புளியந்தீவு தெற்கு சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எம்.அருமைத்துரை தலைமையில் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்று மாலை 03ம் குறுக்குத் தெரு வீதியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் அந்தோனி கிருரஜன், மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் உதவிப் போதகர் றொபட்டினேஸ், சனசமூக நிலைய உறுப்பினர்கள், புளியந்தீவு ரிதம் இளைஞர் கழக உறுப்பினர்கள், பிரதேச பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது உயிரிழந்த உறவுகளுக்காக பிரதேச பொது மக்களினால் இந்து, கிறிஸ்தவ ஆராதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், உதவிப் போதகரினால் விசேட செபவழிபாடும் மேற்கொள்ளப்பட்டு வருகை தந்த அனைவரினாலும் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts