வீடு ஒன்று முற்றாக தீக்கிரை – எரிந்த நிலையில் காணப்பட்ட உருவம்

கார்த்திகேசு

திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில்-02 தம்பிமுத்து வீதியில் கட்டடக் கொந்தராத்து பணயில் ஈடுபட்டு வரும் நபருடைய பழைய வீடு தீயினால் எரிந்து நாசமாகியுள்ளது.

அத்துடன் எரிந்த இயந்திரத்திற்கு அடியில் மனித உடலைப் போன்ற ஒரு உருவம் எரிந்து கிடப்பதைப் போன்று காணப்படுவதாகவும் இது தொடர்பான விசாரணைகளை தற்போது முன்னெடுத்து வருவதாகவும் திருக்கோவில் பொலிசாரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த சம்பவம் தொடர்பில் திருக்கோவில் பொலிசார் மற்றும் காஞ்சிரம்குடா இராணுவத்தினர் புனராய்வு உத்தியோகத்தர்கள் அப்பகுதி கிராம உத்தியோகத்தர் என அனைவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு இருந்தனர்.

நேற்று புதன்கிழமை இரவு  வீடு எரிந்துள்ளதுடன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பல இலட்சம் பெறுமதியான நெல் அறுவடை இயந்திரமும் எரிந்து நாசமாகியுள்ளதுடன் இந்த இயந்திரத்திற்கு அடியில் அடையாளம் காண முடியாத நிலையில் ஒரு உருவம் எரிந்து கிடப்பதாகவும் இது மனிதனுடையதா?  என்ற சந்தேகம் எழுந்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்கு அம்பாறை தடயவியல் குற்றப் பொலிசாருக்கு தெரியப்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ் வீட்டின் பிரதான வாயில் பகுதியில் உள்ள கேட்டில் மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இச் சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

 

Related posts