அனர்த்தங்களும் ஆயத்த ஆற்றுப்படுதல்களும்.

அனர்த்தங்களும் அழிவுகளும் ஒரு கணப்பொழுதில் இயற்கையாகவும் செயற்கையாகவும் நிகழ்ந்து உயிராபத்துக்களை ஏற்படுத்துகின்றது. அனர்த்தங்களால் ஏற்படும் உயிரழிவுகளும் தாக்கங்களும் அதன் பிரதிபலிப்புகளால் உருவாகும் விளைவுகளும் சமூகத்தில் நீண்ட நாட்களுக்கு நிலைத்திருப்புக்கொள்ளச்செய்கின்றன.

சுனாமி, சூறாவளி, சுழல்காற்று, மழை, வெள்ளம், மண்சரிவு, மண்மேடு சரிவு, வரட்சி, பனிப்பொழிவு, பூகம்பம், யுத்தம், பயங்கர குண்டுவெடிப்பு, தீவீரவாத தாக்குதல், மிதிவெடி, துப்பாக்கிச்சூடு ஆகியவற்றால் ஏற்படும் உளத்தாக்கங்களும், மனித இனத்திற்கு நடத்தை ரீதியாக எதிர்மறைத்தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது.

பேரழிவுகள் எவரையும் விட்டு வைப்பதில்லை. பேரழிவு ஏற்படும்போது மக்கள் நியாயமாக யோசிப்பதோ சிந்திப்பதோ கிடையாது. அதற்கான விநாடியும் போதாமலிருக்கும். ஆனால் எதிர்வரும் கால பேரழிவுகளின் போது உயிர் தப்புவதற்கு நாம் அனைவரும் ஆயத்தமாக இருப்பதற்கு முறையான முறைமைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

பேரழிவு சம்பந்தமாக அரசாங்கம் மற்றும் ஊடகங்களில் மாத்திரம் சொல்வதை கவனத்திலெடுக்க வேண்டும். இயற்கையான பேரழிவுகள் இன்னும் இரு மணி, அரை மணி நேரங்களில் ஏற்படப்போவதை அறிந்து உங்களுக்கும் உங்கள் அன்பானவர்களுக்கும் ஆபத்து வரும் என்பதை மனதளவில் ஏற்றுக்கொள்வதுடன் பேரழிவுக்கு முன்னராக ஆயத்தமாக இருக்க மனதை தயார்ப்படுத்த வேண்டும். இல்லையெனில் அனர்த்தத்தின்போது உயிராபத்திலிருந்து தப்புவது கஷ்டமாகிவிடும்.

கரையோரம், மத்தியமலைநாடு, நகர்ப்புறம், ஒதுக்குப்புறம் என ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன பேரழிவுகள் தாக்கலாம் என்பதை நிச்சயமாக தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும். கரையோரங்களில் மண்சரிவின் தாக்கம் குறைவாக இருப்பதுடன் மண்ணரிப்பினால் கடல் ஊருக்குள் ஊடுருவுவதையும் அறிந்து தெரிந்து வைத்திருக்க வேண்டும். பேரழிவுக்கேற்ப பாதுகாப்பான இடங்கள் எங்கே இருக்கின்றது, எவ்வாறு செல்லலாம் என்பதையும் அறிந்து தெரிந்து வைத்திருக்க வேண்டும். 

உங்கள் வீடு கட்டப்பட்டிருக்கும் விதமும் அது அமைந்திருக்கும் இடமும் பாதுகாப்பானதாக இருக்கின்றதா 

என்று நீங்களே உங்களின் உயிர் இருப்பினை உறுதிப்படுத்துபவராக இருக்க வேண்டும். நீர் நிரம்பி வழியும் நீரினால் மூழ்கும் அல்லது குளம் இருந்த இடத்தில் மண்ணை எவ்வளவுதான் இட்டு கட்டிடங்கள், தொழிற்சாலைகள், வைத்தியசாலைகள் கட்டினாலும் மழை வெள்ள காலங்களில் மூழ்கும் நிலைக்கு உள்ளாகும் என்பதை நிச்சயமாக அறிந்து பாதுகாப்பான இடங்களுக்கு நகர்பவர்களாக இருக்கவேண்டும்.

குளம், ஆறு இருந்த இடத்தில் மக்கள் குடியிருப்பு வீட்டுத்திட்டங்கள், அரச நிறுவனங்கள் ஆகியவற்றை அமைக்கும்போது மண்ணின் தன்மையினை கவனத்திற்கொள்ளவேண்டும். கட்டிடங்கள் அரசினால் வந்ததென்பதற்காக உயிர்களை காப்பாற்றக்கூடிய வைத்தியசாலையை குளம் மற்றும் வயல்காணி அமைந்திருந்த இடத்தில் கட்டமுடியாது. அவ்வாறு நிர்மாணிக்கப்பட்டால் கட்டிடத்தில் வெடிப்புகள் ஏற்பட்டு கட்டிடம் இடிந்து விழவோ வெள்ளத்தினால் நீர் நிரம்பி வழியும் நிலைக்கோ உள்ளக்கப்படும். இதனால் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற்று உயிரை காப்பாற்ற வந்தவர்களின் உயிர் பறிபோகும் நிலையே ஏற்படலாம் என்பதை மனிதம் உள்ளவர்கள் அறியவேண்டும். இவ்வாறான கட்டிட நிர்மாணிப்புகள் இலங்கை முழுவதிலும் இடம்பெற்றுள்ளன.

மண்ணின் தன்மையறிந்தும் கட்டிடங்கள் கட்டப்பட்டு மீண்டும் கட்டிடங்கள் இடிக்கப்பட்ட நிலை மட்டு அம்பாறை உட்பட பல்வேறு இடங்களிலும் இடம்பெற்றுள்ளது.
இதனால் பொதுமக்கள் வரிப்பணத்தில் வருகின்ற அரச நிதி வீண்விரமாகிறது. இவ்வாறான நிலைமைகளை குறித்த அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அலுவலர்கள் கவனத்திலெடுத்து இடம் அறிந்து கட்டிடங்களை அமைப்பது சாலச் சிறந்ததாக இருக்கும்.

வீட்டினுள் அரச நிறுவனங்களுள் தீ விபத்து ஏற்படக்கூடிய பொருட்களையகற்ற வேண்டும். புகையை கண்டறியும் கருவி ஒவ்வொரு அரச, அரச சார்பற்ற மற்றும் வீடுகள் என ஒவ்வொரு இடங்களிலும் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அதன் பேட்டரிகளை வருடத்துக்கு ஒரு தடவையோ பல தடவையோ மாற்றி முறையாக அதை பராமரிக்க வேண்டும்.

அனர்த்தங்களின்போது அவசரத்துக்குத் தேவையான பொருள்களை ஆயத்தமாக வைத்திருக்க வேண்டும். மின்சார சாதனங்கள், மின்னேற்றப்பட்ட மின் உபகரணங்கள், தண்ணீர், கையடக்கத் தொலைபேசி, போக்குவரத்து வசதி ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும். உங்களிடம் வாகனம் இருந்தால் அதில் முழுமையாக எரிபொருளை நிரப்பி வையுங்கள். உங்கள் வீட்டில் உணவு, தண்ணீர், முதலுதவிப்பெட்டி ஆகியவை இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். உங்களுக்குத் தேவையானதை நீங்களே வைத்திருக்கின்றீர்களா என்று பலதடவை பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு பக்கத்திலும் தூரத்திலும் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கையடக்கத் தொலைபேசியின் இலக்கத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இடி மின்னல் மழை வெள்ளத்தின்போது வீடுகளில் மற்றும் நிறுவனங்களில் மின்சாரம் தடைப்படலாம். அதற்கேற்ற வகையில் மின்சாரத்தினை சேமித்து வைக்கக்கூடிய, மின்னேற்றப்பட்ட விளக்குகளை, பேட்டரி, சூரியப்படலம் மூலம் இயங்ககூடிய மின் விளக்குகளை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். 

உங்கள் வீடு மற்றும் நிறுவனங்களில் தீ முழுவதும் பரவிய பேரனர்த்தத்தின்போது உங்கள் கட்டிடத்திலிருந்து வெளியே எவ்வழியால் எங்கே இலகுவாக செல்லலாம் என்பதை ஞாபக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் குறிப்பிட்ட ஓர் இடத்தில் வந்து சங்கமிப்பதாக இருத்தல் வேண்டும். தீ பரவ ஆரம்பித்ததும் அவ்விடத்தை விட்டு உடனே வெளியில் போகவேண்டும். விவேகமாக தரையில் நகர்ந்தோ, நடந்தோ போகும்போது யாராவது தடுக்கி விழுந்தால் அவரை அவ்விடத்தில் விட்டுச்செல்லாமல் தூக்கிக்கொண்டு நடந்துகொண்டே இருக்கவேண்டும். எம்மால் நிச்சயமாக தப்பிக்க முடியும் என்று ஏனையவர்களுக்கு தட்டிக்கொடுத்து ஒவ்வொருவரையும் விரைந்து செல்ல ஊக்கப்படுத்துபவர்களாக நாம் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்.

பேரனர்த்தங்களின்போது வயதானவர்களுக்கும் உடம்பு முடியாதவர்களுக்கும் குழந்தைகளுக்கும் கற்ப்பித்தாய்மார்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் விசேட தேவையுடையவர்களுக்கும் ஆபத்தின் போதும் உயிர்விடும் நிலையில் கூட உதவுபவர்களாக இருக்க வேண்டும். தீ விபத்து ஏற்படும்போது தரையில் படுத்துக்கொண்டு அப்படியே படுத்தவாறு நகர்ந்து விரைவாக விவேகமாக வெளியே செல்ல முயற்சிக்க வேண்டும். புகை சூழ்ந்திருப்பதனால் அந்த இடத்தை பார்ப்பது மிக கஸ்டமாக இருக்கலாம். தீ விபத்தின்போது புகையினை சுவாசிப்பதனாலேயே நிறைய பேர் உயிரிழந்திருக்கின்றார்கள். பாரிய தீ அனர்த்தம் ஏற்படும் போது எக்காரணம் கொண்டும் உங்கள் உடமைகளை, பொருள்களை எடுத்துக்கொண்டு செல்வதை முற்றாக தவிருங்கள். ஒரு நொடி தாமதித்தால் உங்கள் உயிரை இழக்கவேண்டி ஏற்படலாம் என்பதை பேரனர்த்தங்களின் போது நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பூமியதிர்ச்சி ஏற்படும்போது வீட்டிலுள்ள உறுதியான மேசைக்கு கீழேயோ சுவருக்கு பக்கத்திலேயோ மறைந்துகொள்ளுங்கள். பூமி அதிர்ச்சிக்குப் பிறகு சிறு சிறு அதிர்வுகள் ஏற்படும் என்பதை எதிர்பார்த்திருங்கள். எவ்வளவு சீக்கிரமாக கட்டிடத்தை விட்டு வெளியே போக முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக வெளியேறுபவர்களாக இருக்க வேண்டும்.

மீட்பு வேலையில் ஈடுபடுவர்கள் அவர்களுக்குரிய முறையான சட்டவிதி முறைகளுடன் அவ்விடத்திற்கு வருவதற்கு பல மணிநேரம் ஆகலாம். ஆதலால் உங்களால் முடிந்தளவு நீங்கள் வெளியேறுவதுடன் தங்கள் உயிரை கவனத்தில் எடுத்து ஏனையோரையும் விவேகமாக காப்பாற்றுபவர்களாக இருக்கவேண்டும்.

சுனாமி பேரலையினால் சுனாமி தாக்கும்போது கடல் அலைகள் கரையைத் தாண்டி வேகமாக வரும்போது உடனே உயரமான பகுதிக்கு செல்லவேண்டும். இன்னும் மேன்மேலும் பெரிய பெரிய அலைகள் வரும் என்பதை எதிர்பார்த்திருங்கள். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஊடகத் தொடர்பாடலுடன் இருப்பதற்கேற்ற வகையில் பேட்டறியில் இயங்ககூடிய வானொலிகளை, கையடக்கத் தொலைபேசியிலுள்ள நம்பகமான ஊடக வெளியீடுகளை, அறிக்கைகளை அறிவது சிறப்பாக இருக்கும்.

சூறாவளி தாக்கும்போது எம்மை பாதுகாக்ககூடிய இருப்பிடங்கள், பெரும்கோட்டைகள், மறைந்துகொள்வதற்கென்று நீங்கள் கட்டி வைத்திருக்கும் இடங்கள், குகைகள் ஆகியவற்றுக்கு உடனடியாக விரைந்து செல்ல வேண்டும். மழை வெள்ளம் வரும்போது தண்ணீர் புகுந்த கட்டிடத்தை விட்டு வெளியே வந்துவிடுங்கள். தண்ணீரில் நடப்பதையோ வாகனத்தை ஒட்டிக்கொண்டு போவதையோ முற்றுமுழுதாக தவிருங்கள். ஏனென்றால் அந்த நீரில் கழிவுநீர் கலந்திருக்கலாம், சில ஆபத்துகளும் மறைந்திருக்கலாம். அதாவது கழிவுப்பொருள்கள் இருக்கலாம். பாதாள சாக்கடை திறந்து கிடக்கலாம். மின்சார கம்பிகள் அறுந்து விழுந்திருக்கலாம். ஆகவே வெள்ளம் வரும்முன் அணை கட்டுவதைப் போல வழமையாக வெள்ளம் வரும் இடம் என்று தெரிந்தால் சில வேளைகளில் ஏற்கனவே வராத இடத்திலும் வெள்ளம் வரலாம் என்பதை அறிந்து வரவிருக்கும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படாத வகையில் அவ்விடத்தை விட்டு நகர்வது சாலப்பொருத்தமாக இருக்கும்.

வீதியில், வெளியில் இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் கரைபுரண்டால் அது ஒரு காரையோ வாகனத்தையோ அடித்து இழுத்துச் செல்லும். வெள்ளத்தின்போது கரை புரண்டு ஓடும் தண்ணீரில் வாகனத்தை ஒட்டிக்கொண்டு சென்றதனாலேயே நிறைய நபர்கள் உயிர் இழந்ததுக்கு காரணமென பதிவு செய்யப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ ,வளிமண்டலத் திணைக்கள அலுவலர்கள், மீட்பு படையினர், கட்டிட ஆராய்ச்சி திணைக்களத்தினர், அனர்த்தங்களுக்கு பொறுப்பான அதிகாரிகள் ஆகியோர் உரிய இடத்தை விட்டு வெளியேற சொன்னால் உடனே இருக்கும் இடத்திலிருந்து வெளியேறுபவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் எங்கே 
இருக்கின்றீர்கள் என்பதை உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
இல்லையென்றால் உங்களைத் தேட சென்றவர்கள் ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் நிலை உருவாகும். எனவே ஒவ்வொரு சிறு சிறு விடயங்களையும் கணப்பொழுதில் சிந்தித்து தலைமைத்துவ முகாமைத்துவம் செய்பவர்களாக ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்.

அனர்த்தங்களின் போது கையடக்கத் தொலைபேசியில் பேசுவதை விடுத்து குறுஞ்செய்திச் சேவையினை பரிமாறிக்கொள்ளுங்கள்.
இல்லையெனில் இடி மின்னல் மின்சாரத்தாக்கம் போன்ற பல்வேறு தாக்கங்களுக்கு உட்பட நேரிடலாம்.

விச வாயு தாக்கும்போதோ வைரஸ் மற்றும் பக்டீரியா(BACTERIA) பரவும்போதோ அணுமின் விபத்து ஏற்படும்போது வீட்டை விட்டு உரிய இருப்பிடத்தை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது ஏசீயை(AC) இயங்காமல் வைப்பதுடன் கதவுகளையும் யன்னல்களையும் மூடி வைக்க வேண்டும்.

அணுமின் விபத்து ஏற்படும்போது ஆபத்தான கதிர்வீச்சு உங்களைத் தாக்காமல் இருக்க உங்கள் கட்டிடத்தின் தாழ்வான பகுதிக்கு செல்ல ஆயத்தமாயிருத்தல் வேண்டும். தொலைக்காட்சி மற்றும் வானொலியில் உடனுக்குடன் செய்திகளையறிய வேண்டும். ஆபத்து நீங்கிவிட்டது என்று அதிகாரிகள் சொல்லும் வரையிலும் அவ்விடத்தை விட்டு நகராமல் இருக்க வேண்டும்.

மனிதர்கள் நடமாடாத தனிமையான சூழலுக்கு செல்வதை தவிர்ப்பதன் மூலம் மிதிவெடி போன்றவற்றிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். உங்களுக்குத் தெரியாத பற்றைக்காடுகள் நிறைந்த புதிய இடங்களுக்கு செல்லும்போது கவனமாக செயற்படவேண்டும். மிதிவெடி விழிப்புணர்வுக்குரிய விழிப்புணர்வு பலகைகள், பாதுகாப்பற்ற இடம் என்ற பதாதைகள் பொருத்தப்பட்டுள்ளதா என நன்கு அவதனித்து அதன் பின்னர் அவ்விடத்தில் நடமாடுவதை சிந்திக்கவேண்டும்.

அனர்த்தங்கள் நிகழ்வதற்கு இரு மணி நேரத்திற்கு முன்னர் அவசர நிலையினை நிர்வகிக்கும் துறையினர் அரசுக்கும் ஊடகங்களும் அறிவிக்க ஊடகங்கள் அந் நிலைமையினை ஊடகங்கள் வாயிலாக அறிக்கை வெளியீடுவர். அவ் அறிக்கைக்கேற்ப நாம் ஒவ்வொருவரும் செயற்படவேண்டும்.

அவசரத்துக்கு தேவையான பொருள்களை சேமித்து வைக்கும்படியும் அவற்றை ஒவ்வொரு வருடமும் முறையாக பார்க்கும்படி பேரழிவை நிர்வகிக்கும் அமைப்புகள் பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் வானொலி, இணையத்தளம் ஊடாக அறிவிப்பதை கவனத்திலெடுத்து அதற்கேற்ப செயற்பட வேண்டும். ஒரு நபர் குறைந்தது பதினொரு லீற்றர் தண்ணீரை வைத்துக்கொள்வதுடன் மூன்று நாட்களுக்குத் தேவையான சமைக்காமல் அப்படியே சாப்பிடக்கூடிய கெட்டுப்போகாத உணவுகளை சேமித்துக்கொண்டு செல்லவேண்டும். உங்கள் இடத்துக்கும் சூழ்நிலைக்குமேற்ப அடிப்படை அத்தியவசிய பொருட்களை ஆயத்தப்படுத்தி கொண்டு செல்பவர்களாக இருக்க வேண்டும்.

போர்வை, கதகதப்பான உடை, நல்ல பாதணி, டார்ச் லைட், வானொலி, பேற்றரி(BATTERY), முதலுதவிப் பெட்டி, மாஸ்க், மருந்து, மருந்துசீட்டு மற்ற முக்கிய ஆவணங்கள், அவசர தொடர்புகள், கிரேடிட் கார்ட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை கொண்டுசெல்ல ஆயத்தமாயிருக்க வேண்டும்.

பேரழிவுக்கு பின்னர் முகாமில் இருப்பதற்கு பதிலாக இயன்றளவு உறவினர்களுடனும் நண்பர்களுடனும் இருங்கள். நீங்கள் இருக்கும் இடத்தை சுத்தமாக வையுங்கள். குப்பைகளை சுத்தம் செய்ய உங்கள் பொருள்களை மட்டுமே பயன்படுத்துங்கள். முடிந்தால் கையுறை, நல்ல பாதணி, கனமான தொப்பி, மாஸ்க் போன்றவற்றை பயன்படுத்துங்கள்.
மின்சார கம்பிகளும் நெருப்பு தணல்களும் குப்பைகளில் இருக்கலாம். அதனால் கவனமாக சுத்தம் செய்ய வேண்டும்.

அரசாங்கமும் மீட்புக் குழுவும் பொதுமக்களை பேரழிவிலிருந்து பாதுகாப்பதையே கவனம் செலுத்துவார்கள். இழந்த பொருட்களையெல்லாம் திருப்பிக் கொடுப்பதற்கல்ல. மானத்துடன் உயிர்வாழ்வதற்கு அடிப்படை தேவைகளான உணவு, குடிநீர், உடை, உறையுள் ஆகியவை தேவையென்பதை மாத்திரமே மனதில் கொள்ள வேண்டும்.

பேரனர்த்த அழிவினால் ஏற்பட்ட அதிர்ச்சிக்குப் பிறகு கவலை, மனச்சோர்வு, மனநிலையில் மாற்றம் போன்றவற்றால் நீங்களோ, உங்கள் குடும்ப உறவினர்களோ, உங்கள் குழந்தைகளோ, நண்பர்களோ பாதிக்கப்படலாம். நீங்கள் அமைதியாகவும் நம்பிக்கையாகவும் இருக்கின்றீர்கள் என்பதை உங்கள் பிள்ளைகள் பார்க்க வேண்டும். பிள்ளைகளுக்கு பாடசாலை பாடத்தை சொல்லிக்கொடுப்பதுடன் அவர்களோடு விளையாடுங்கள், தவறாமல் குடும்ப வழிபாடு செய்வதுடன் பேரழிவு சம்பவங்களை யோசித்துக்கொண்டிருக்காமல் விரக்தியையும் வெறுப்பையும் உறவினர்களிடமும் குழந்தைகளிடம் காட்டாதீர்கள். உதவும்போது உதாசீனம் செய்யாமல் ஏற்றுக்கொள்ளுங்கள்.

பேரழிவுக்கு பின்னரான நிலையில் உங்கள் மீது அக்கறையாக இருப்பவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அனர்த்தங்களால் ஏற்படும் உளத்தாக்கங்களும் அனர்த்தங்களைத் தொடர்ந்து நடைபெறும் களவு, கொலை, கொள்ளை, வன்புணர்ச்சி போன்றவற்றால் ஏற்படும் நெருக்கீடுகள் தொடர் உளத்தாக்கங்களுக்கு காரணமாக அமைகின்றன. அனர்த்தங்களால் ஏற்படும் உளநெருக்கீடுகள் ஒருங்கிணைந்து சமூகமட்டக் நெருக்கீடுகளாக பரிணமிக்கின்றன. நெருக்கீடுகளினால் ஏற்பட்ட மனவடுக்களை ஆற்றுப்படுத்தல் என்பது சாதாரணவிடயமல்ல. அவை நீண்டநாள் நிலைத்திருப்புக்கொண்டவையாக விளங்குகின்றன. இவ்வாறு அனர்த்தத்தின் போதான உளக்கோளாறுகளை POST – TRAUMATIC STRESS DISORDER) என அழைக்கின்றனர்.

அனர்த்தங்களால் ஏற்படும் உளப்பாதிப்புகள் நேரடியாக வெளிப்படு தன்மையற்றவையாகவும் உள்ளார்ந்த உளவடுக்களாகவும் அமைந்துவிடுகின்றன. உள்ளார்ந்த அகவடுக்களால் ஏற்படும் மன அழுத்தங்கள் மானிட வெளிப்பாடுகளுக்கு தடையாகவும் அமைகின்றன. அவை தனி மனிதனது மேம்பாட்டில் மாத்திரமின்றி சமூக பொருளாதார பண்பாட்டு நிலைகளிலும் நீண்ட நாள் நிலைத்திருந்து எதிர்மறைத் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன.

பல பெற்றோர்களிடம் நிகழ்ந்த உண்மையான சம்பவத்தை கூறிய பிறகும் தனது உயிரணுக்கள் இறக்கவில்லை வருவார்கள் என்ற ஆதங்கத்தோடு பலர் இருந்து வருகின்றனர். தனது கணவன், மகன், அண்ணன், அக்கா, தம்பி ஆகியோர் இறக்கவில்லையென்ற எண்ணத்தில் பலர் இன்றும் கூட வாழ்ந்து வருகின்றனர். உயிருடன் இல்லாதவர்களை உயிருடன் இருக்கிறார்கள் என்று பலர் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான நிலைமைகளையும்
அனர்த்தங்கள் ஏற்படுத்தியுள்ளது.

பெற்ற தாயின் முன்னே இடம்பெற்ற தாங்கமுடியாத வன்புணர்வு போன்ற சம்பவங்கள் ஆற்றுப்படுத்த தகாத உளவடுக்களாக அமைகின்றன. இவை தவிர சம்பவங்களை கேள்விப்பட்டவர்கள், பிரேதங்களை கண்ணுற்றவர்கள், உருக்குலைந்து அழுகிய நிலையில் காணப்பட்ட சடலங்களை கண்ணுற்றவர்கள், மீள்கட்டுமான நடவடிக்கைகளால் புறக்கணிக்கப்பட்டோர், அச்சுறுத்தப்பட்டோர் என அனர்த்தங்களுக்கு உட்படாதோரும் உளநெருக்கீடுகளுக்கு உட்படுகின்றனர்.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்கால சூழலில் பெரும்பான்மை படையினரின் ஆக்கிரமிப்பு அட்டூழியத்தினால் எம் இளம் பெண்கள் பலர் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டனர் என்பதை யாவருமறிவர். அதனாலேயே உலகத்தில் முதன் முதலில் தமிழர்களால், பெண்களால் தற்பாதுகாப்பு தற்கொலையும் தோற்றுவிக்கப்பட்டிருந்தது.

அனர்த்தங்கள் நிறைவுற்ற போதிலும் உளநெருக்கீடுகள் மற்றுமொரு அனர்த்தத்தின் பரிமாணத்திற்கு காரணமாக அமைகின்றன. இலங்கையில் கடந்த 2004 இல் இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தின் போது 30196 பேர் மரணத்தை தழுவியுள்ளதுடன் உளத்தேற்றமின்மையால் பெருமளவான தற்கொலைகளும் இடம்பெற்றிருந்தது.

அனர்த்தங்களின் போது சிறுவர்களும் பெண்களும் கூடியளவு உளநெருக்கீடுகளுக்கு உட்படுவதுடன் அனர்த்த தாக்கங்களைத் தொடர்ந்து நித்திரையில் திடுக்கிட்டு எழுவதும் வீறிட்டு அழுவதும் தூக்கத்தில் அலறுவதும் உணர்ச்சி வசப்படுவதும் அமைதியாகி ஒடுங்குவதும் கற்றலில் காழ்ப்புணர்வும் பாடசாலை செல்ல மறுப்பதும் சோம்பலாயிருப்பதும் வழமைக்கு மாறாக தூங்குவது ஆகியன மாணவர்களின் உளத்தேற்றமின்மையின் வெளிப்பாடுகளாகும்.

போர்க்காலத்தில் எம் தமிழ் இனத்தவர்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டனர் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. போரினல் சொந்த மண்ணில் மனையில் வாழாது பெரும்பாலனவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் தங்கள் உறவினர்களை பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மனதிற்குள் ஆயிரம் பிரச்சினைகளுடன் வாழும் முதியவர்களே வாழ்வதற்கு ஆயத்தமாகும்போது ஒரு சில சவால்களுடன் வாழும் இளைஞர் யுவதிகள், தற்கொலையினால் உயிரை மாயக்கும் நிலையிலிருந்து விடுபடுபவர்களாவதுடன் தேவையற்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடாத நற்பிரஜைகளாகவும் திகழ வேண்டும்.

பெரும்பான்மையினர் எமது தமிழ்ச் சமூகத்தை நுண்கடன், போதைப்பொருள், வாள்வெட்டு கலாசாரம் ஆகியவற்றிற்குள் திட்டமிட்டு உட்படுத்தி தமிழர்களை வீழ்ச்சியடைய செய்கின்றனர். வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த முப்பது வருட காலமாக தமிழர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதனை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான கலாசாரங்களிலிருந்து எம் உறவினர்கள் ஒவ்வொருவரையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழ்ச் சமூகத்துக்கு இருக்கின்றது.

இன்றைய நவீன இயந்திர யுகத்தில் எமக்கு அருகிலிருப்பவர்களுடன் அளவளாவுவதற்கு காலம் போதாத நிலையில் இயந்திரம் போன்று இயங்கும் நாங்கள் ஒவ்வொருவரும் எமக்கு ஏற்படும் ஒவ்வொரு சிறு சிறு சவால்களிலிருந்தும் இயற்கை, செயற்கை அனர்த்தங்களிலிருந்தும் ஏனைய இதர அனர்த்த விபத்துகளிலிருந்தும் நாம் ஒவ்வொருவரும் தன்னைத்தானே விடுவித்துக்கொள்வதுடன் ஏனையவர்களையும் அதிலிருந்து மீண்டெழ வைப்பவர்களாக இருக்க வேண்டும்.

Related posts