இன்றுமுதல் கல்முனை மாவட்ட பாடசாலைகளில் சா.த உ.த வகுப்புகள்

கல்முனைக்கல்வி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத்தவிர்ந்த ஏனைய பாடசாலைகளில் தரம் 10 தரம் 11 தரம் 12 தரம் 13 ஆகிய வகுப்புக்களை இன்று(9) புதன்கிழமை முதல் கிரமமாக நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை திறக்கப்படமாட்டாது. எனவே அவை தவிர்ந்த கல்முனைக்கல்வி மாவட்டத்திலுள்ள ஏனைய கல்முனை சம்மாந்துறை திருக்கோவில் வலயப்பாடசாலைகளில் மேற்படி வகுப்புகளை சுகாதாரநடைமுறைக்கிணங்க நடாத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் வலயக்கல்விப்பணிப்பாளர்களுடனான கூட்டம் அவரது பணிமனையில் நேற்று(8) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றபோது மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கூட்டத்தில் வலயக்கல்விப்பணிப்பாளர்களான எஸ்.புவனேந்திரன்(கல்முனை) எம்.எஸ்.சஹதுல்நஜீம்(சம்மாந்துறை) யோ.ஜெயச்சந்திரன்(திருக்கோவில்) ஏ.எல்எ.ம்.ஹாசிம் (அக்கரைப்பற்று) ஆகியோர் கலந்துகொண்டு கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

கிழக்கு ஆளுநர் அறிவித்த கொரோனா விசேடவிடுமுறையின் பின்னர் கடந்த திங்கட்கிழமை(7)முதல் கல்வியமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய பாடசாலைகள் திறக்கப்பட்டபோதிலும் மாணவரின் சராசரி வரவு 5வீதமாக இருப்பதை கல்விப்பணிப்பாளர்கள் சுட்டிக்காட்டினர். ஆசிரியர்களின் வரவும் சராசரி 60-65வீதமாக இருப்பதாகக்கூறினர்.

திருக்கோவில் வலயத்தில்…
திருக்கோவில் வலயத்தில் உள்ள அலையடிவேம்புக்கோட்டம் தனிமைப்படுத்தப்பட்டு பாடசாலைகள் ஏலவே மூடப்பட்டுள்ளன.எனவே அது தவிர்ந்த திருக்கோவில் மற்றும் பொத்துவில் கோட்டங்களிலுள்ள 1பாடசாலைகள் மாத்திரம் கடந்த இருதினங்களாக இயங்கியது.

திருக்கோவில் வலயத்தில் கடந்த இருதினங்களாக க.பொ.த. சா.த மற்றும் உயர்தரவகுப்புகளை மாத்திரமே அங்குள்ள சுகாதாரவைத்தியஅதிகாரியின் ஆலோசனையுடன் நடாத்தியதாகவும் அதற்கமைய ஆலையடிவேம்புக்கோட்டம் தவிர்ந்த பத்துப் பாடசாலைகள் திறக்கப்பட்டபோதிலும் திங்களன்று 13வீத மாணவர்களும் செவ்வாயன்று 27வீத மாணவர்கள் பாடசாலைக்கு சமுமளித்தனரென்றும் ஆசிரியாகள் 66வீதம் சமுகமளித்ததாகவும் திருக்கோவில் வலயக்கல்விப்பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் சுட்டிக்காட்டிப்பேசினார்.

அங்கு திருக்கோவில் கோட்டத்தில் தாண்டியடிப்பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டகாரணத்தினால் அதற்குள் உள்ள மாணவர்கள் பாசாலைக்கு சமுகமளிக்கவில்லை என்றும் வெளியுர் ஆசிரியர்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள அக்கரைப்பற்று தாண்டி போக்குவரத்திலீடுபடமுடியாதலால் அவர்கள் வரவில்லையென்றும் கூறினார்.

இறுதியில் இன்று(9) புதன்கிழமை முதல் சமுகஇடைவெளியைப்பேணி சுகாதார நடைமுறையைப்பேணி மேற்படி நான்கு வகுப்புகளையும் நடாத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

Related posts