இன்று காலை 9மணிக்கு உகந்தமலையானின் ஆடிவேல் தீர்த்தோற்சவம்.

வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை முருகனாலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா தீர்த்தோற்சவம் இன்று(4)செவ்வாய்க்கிழமை காலை 9மணியளவில் நடைபெறுமென்று ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் தெரிவித்தார்.  

திருவோணம் இன்று காலை 9.15மணியளவில் நிறைவுறுவதால் அதற்கு முன்னதாக தீர்த்தம் இடம்பெறும் என்றும், பக்தர்கள் அதற்கேற்ப நேரகாலத்தோடு உரிய  கிரியைகளுக்கு சமுகமளிக்கவேண்டுமெனவும், அவர் மேலும் கூறினார்.
 

ஆலயவண்ணக்கர் சுதுநிலமே திசாநாயக்க(சுதா) தலைமையில் ஆலயத்தின் கிழக்கேயுள்ள வங்காளவிரிகுடா சமுத்திரத்தில் வழமைபோன்று  நடைபெறவுள்ளது. தீர்த்தோற்சவத்தில் பங்கேற்பதற்காக நேற்றே சுமார் ஆயிரம் பக்தர்கள் ஆலயத்தில் தங்கியுள்ளனர். அவர்கள் மலையேறி ,நேர்த்தியையும் செலுத்தி வருகின்றனர்.

 

கடந்த 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆடிவேல்விழா மஹோற்சவம் இன்று (4) செவ்வாய்க்கிழமை ஆலயதீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும்.

 

ஆலயதிருவிழாசிறப்புப் பூஜைகளை ஆலயபிரதமகுருக்கள் சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் உதவியாக சிவஸ்ரீ க.கு.சீ.கோவர்த்தன சர்மா ஆகியோர் நடாத்திவந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts