இன்று கொரானாவிலிருந்து மீள அம்பாறை மாவட்டத்திற்கான மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமமும் பிரார்த்தனையும்.

நாட்டின் பிரதமரும் சமயவிவகார அமைச்சருமான மஹிந்தராஜபக்ச விடுத்தவேண்டுகோளுக்கமைவாக இலங்கைத்திருநாட்டின் மக்கள்  கொரோனாத்தாக்கத்திலிருந்து மீள்வதற்கும் நாட்டைவிட்டு கொரோனா ஒழியவும்  அருளாசிவேண்டி இன்று(5) வியாழக்கிழமை காலை 6மணியளவில் அம்பாறை மாவட்டத்திற்கான   விசேட மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமமும் பிரார்த்தனையும் காரைதீவில் இடம்பெறவிருக்கின்றது.
 
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 5.30மணிக்கு காரைதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில்  மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமத்திற்கான கிரியைகள் ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் தலைமையில் ஆரம்பமாகும்.
 
பிரதமஅதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்துகொண்டு ஆகுதி வழங்குவார்.
ஏனைய அதிதிகளாக பிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறில் பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் மற்றும் ஆலய தர்மகர்த்தாக்கள் முக்கிய பிரமுகர்கள் 10பேர் சுகாதார விதிமுறைப்படி கலந்துகொள்வார்கள் என மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி தெரிவித்தார்.
 
இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகளை மேற் கொள்ளுமாறு வேண்டுகோள்  பிரதமரால் விடுக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.
 
புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுமாறு திணைக்களப்பணிப்பாளர் அருளாநந்தம் உமாமகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
விசேடமாக ஆலயங்களில் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் விசேட பிரார்த்தனை வழிபாடுகளைச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
 
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இடம்பெறும் இவ் விசேட பிரார்த்தனை வழிபாடுகளைத் தினமும் காலை 6.30 மணிக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் தமிழ்ச் சேவையில் இடம்பெறும் ‘ஆலய தரிசனம்’ நிகழ்ச்சியில் ஒலிபரப்புச் செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related posts