உதவிகளை நிறுத்தவேண்டிய நிலை ஏற்படும் – மைத்திரிக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகள் காரணமாக இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் சனப்பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகார குழு தலைவராக பதவிவகிக்கவுள்ள எலியட் ஏஞ்சலினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மூன்று பிரதிநிதிகள் இந்த கடிதத்தில் ஒப்பமிட்டுள்ளனர். இதன்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில்,

“உங்கள் நாட்டின் நாடாளுமன்றத்தை இடைநிறுத்தி பிரதமரை அரசமைப்பிற்கு முரணான விதத்தில நீக்கிய உங்கள் நடவடிக்கை குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் தற்போதைய நெருக்கடிக்கு ஜனநாயக வழிமுறைகள் ஊடாக தீர்வை காணுமாறும் நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கின்றோம்.

2015 இல் நீங்கள் தெரிவு செய்யப்பட்டமை இலங்கையில் ஜனநாயக சீர்திருத்தம் பொறுப்புக்கூறப்படுதல் மற்றும் நல்லிணக்கம் குறித்த புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்தியது.

நல்லிணக்க செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான உங்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் அரசமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் இலங்கையில் ஜனநாயக ஆட்சிக்கான புதிய சமிக்ஞையை வெளிப்படுத்தின.

இந்த நடவடிக்கைகளிற்கு பதிலாக அமெரிக்கா இலங்கையுடனான உறவுகளில் முதலீடு செய்வதற்கான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

எனினும் துரதிஸ்டவசமாக சமீபத்தைய நடவடிக்கைகள் சரிசெய்யப்படாவிட்டால் உங்கள் நாட்டின் ஜனநாயக அபிவிருத்தி மற்றும் சமீபத்தைய வருடங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என நாங்கள் அச்சமடைந்துள்ளோம்.

சமீபத்தியை நடவடிக்கைகள் இலங்கையில் அரசியல் நெருக்கடியை உண்டுபண்ணியுள்ளது சபாநாயகர் கருஜெயசூரிய இரத்தக்களறி அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளார். இலங்கையில் சமீபத்தில் இடம்பெற்றுள்ள விடயங்கள் எம்சிசி திட்டத்திற்கும் அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிக்கும் அமெரிக்காவின் ஏனைய திட்டங்கள் மற்றும் ஈடுபாடுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இலங்கை அமெரிக்க உறவுகள் நல்லாட்சி ஜனநாயக விழுமியங்களிற்கான அர்ப்பணிப்பு என்ற பகிரப்பட்ட இலக்குகளில் கட்டியெழுப்ப பட்டுள்ளன. இதன் காரணமாக நாடாளுமன்றம் தலையீடுகளின்றி தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு அனுமதிப்பதன் மூலம் இந்த விழுமியங்களிற்கான உங்கள் அர்ப்பணிப்பினை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts