கஞ்சிகுடியாற்றில் மிதமிஞ்சிய மணலே அகழப்படுகின்றன!தம்பிலுவில் பிரிவு நீர்ப்பாசன பொறியியலாளர் விகர்ணன் கூறுகிறார்.

கஞ்சிகுடியாற்றில் மிதமிஞ்சிய மணலே முறைப்படி சகல அனுமதியுடன் சட்டரீதியாக அகழப்படுகின்றன. இதனால் குளத்திற்கு எந்தவித பாதிப்புமில்லை என்று நீர்ப்பாசனத்திணைக்களத்தின் தம்பிலுவில் பிரிவு நீர்ப்பாசன பொறியியலாளர் பா. விகர்ணன் தெரிவித்தார்.
 
அம்பாறை மாவட்டத்திலுள்ள பாரிய நீர்ப்பாசனக்குளங்களில் ஒன்றான கஞ்சிகுடியாற்றில், அண்மைக்காலமாக சட்டவிரோதமாக மணல் அகழப்பட்டுவருவதாகவும், இதனால் குளமும் ,சூழலும் பாதிக்கப்படுவதாகவும் எமது மண்வளம் வேறுபகுதிகளுக்கு கொண்டு செலலப்படுவதாகவும், பரவலாக சமுகவலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்தன.
 
இது தொடர்பாக கஞ்சிகுடியாறு பாரிய நீர்ப்பாசனக்குளத்தை நிருவகித்துவருகின்ற நீர்ப்பாசனத்திணைக்களத்தின் தம்பிலுவில் பிரிவு நீர்ப்பாசன பொறியியலாளர் பா. விகர்ணனிடம் கேட்டபோது அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
 
மேலும் இம் மண்அகழ்வுக்காக முறைப்படி சட்டரீதியாக பெறப்பட்ட ஆவணங்களையும் அனுமதிகளையும் ஒப்பந்தங்களையும் காட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் :
 
எமது தம்பிலுவில் நீர்ப்பாசனப்பிரிவுக்குள் கஞ்சிகுடியாறுகுளம் ,   சாகாமகுளம் ,ருபஸ்குளம் என பாரிய நீர்ப்பாசனக்குளங்கள் உள்ளன.
அவற்றில் கஞ்சிகுடியாற்றுக்குளத்திற்கு நீரை கொண்டுவருகின்ற ஆற்றுப்(தாயாறு) பிரதேசத்தில் மிதமிஞ்சிய மணல் சேர்வதால் அதனை அகற்றவேண்டியதேவையும் ,அவசியமும் உள்ளது.
இந்த மண்அகழ்வை யாரும் திடுதிப்பென ஒரேநாளில் சட்டவிரோதமாக நடாத்திவிடமுடியாது.
 
இதற்கென மண்அகழ்வதற்காக நீர்ப்பாசனத்திணைக்களம்,, பிரதேச செயலகம் ,பிரதேசசபை ,விவசாயஅமைப்புகள் ,,வனபரிபாலனத்திணைக்களம், புவிச்சரிதவியல்திணைக்களம் ஆகியவற்றில் முறைப்படி அனுமதிபெறப்பட்டு எம்முடன் ஒப்பந்தமும் செய்யப்பட்டே அகழ அனுமதிக்கப்படுகின்றன.
 
இம்முறை பலர் மண்அகழ அனுமதி கோரப்பட்டும் ஆக மூன்றுபேருக்கு மாத்திரமே சட்டபூர்வமாக அனுமதி வழங்கப்பட்டது.
 
கஞ்சிகுடியாற்றில் மொத்தம் 4கிலோமீற்றர்  நீளமான பகுதியில் மண் அகழப்படவேண்டும்.அப்போதுதான் குளம் வளமாகும். சீராக வான்பாயும். மீன்வளம்பெருகும். ஆனால் தற்போது கிட்டதட்ட 1.5 மஅ நீளமான பகுதி வெட்டப்பட்டுள்ளது. ஆற்றின் 1கிலோமீற்றர்  நீளமான ஆரம்ப பகுதி எடுக்கப்படவேண்டிய தேவை உள்ளது.
 
கஞ்சிகுடியாற்றுக்குளம் 20அடி உயரத்தைக்கொண்டது. 20அடி நீர்வந்தால் மாத்திரமே வான்பாயும்.கடந்ததடவை வான்பாயவில்லை. ஆக 18அடியே நீர் நிரம்பியது. மணல் அகழ்ந்தால் நீர்வரத்து அதிகமாகும். அப்பொது வான்பாயும் சந்தர்ப்பம் ஏற்படும்.
 
மேலும் திருக்கோவில் பிரதேசத்திற்கு குழாய்நீர்வநியோகத்திற்காக இந்த குளத்திலிருந்து தண்ணீர் பெற ஏற்பாடுமேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதற்காக குளத்தின் அணைக்கட்டை மேலும் 2அடி உயர்த்த தேசியநீர்வழங்கல் வடிகாலமைப்ச்சபை  நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  மொத்தத்தில் மிதமிஞ்சிய மணல் அகற்றப்படவேண்டியது கட்டாயமாகும்.
 
தற்சமயம் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டரீதியான மண்அகழ்வு எம்மால் அடிக்கடி மேற்பார்வை செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகிறது. மணலை ஏற்றும் வாகனங்கள் வந்துபோகும் பாதைகளையும் இந்த மண்அகழும் ஒப்பந்தகாரர்களே சீராக்குவர். அதற்காக தற்சமயம் மண்அகழ்வு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
 
பாதைகளை சீராக்கியதும் மேலும் ஆரம்பமாகும். இதுவரை கஞ்சிகுடியாற்றில் மொத்தம் 4கிலோமீற்றர்  நீளமான பகுதியில் கிட்டதட்ட 1.5 கிமீ நீளமான பகுதி வெட்டப்பட்டுள்ளது. ஆற்றின் 1கிலோமீற்றர்  நீளமான ஆரம்ப பகுதி இன்னும் எடுக்கப்படவேண்டிய தேவை உள்ளது.
 
அகழ்வுக்காக அனுமதிக்கப்பட்ட மூன்று முகவர்கள் மாதமொன்றுக்கு 2500கியுப் அகழ்வதற்கு மொத்தமாக ஆறு மாதங்களுக்கு 15000 கியுப் அனுமதி வழங்கப்பட்டி ருந்தது. ஆனால் அவர்கள் கடந்த இருமாதங்களுள் 5000கியுப்பிற்கு குறைவாகவே மண்ணை அகழ்ந்துள்ளனர்.
 
மேலும், இந்த மண்அகழ்வோர் இப்பிரதேச பொதுஅமைப்புகள் கேட்டுக்கொள்ளும் பட்சத்தில் மண் உள்ளிட்ட உதவிகளை செய்யவும் முன்வரவேண்டும். அத்துடன் மண்அகழ்வு நிறைவுற்றதும் பாதைகள் குண்டுகுழிகள் அனைத்தும் பூரணமாக சீர்செய்யவேண்டும் என ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது.
எனவே யாரும் அஞ்சத்தேவையில்லை. இது சட்டவிரோதமானதல்ல. என்றார்.

Related posts