கழிவகற்றல் கட்டணத்தை மட்டுப்படுத்த கல்முனை மாநகர சபை நடவடிக்கை

கல்முனை மாநகர சபை எல்லைக்குள் மலசல மற்றும் திரவக்கழிவகற்றல் சேவைக்கு அதிக கட்டணம் அறவிடப்படுவதைக் கவனத்தில் கொண்டு, அக்கட்டணத்தை மட்டுப்படுத்தி, நிர்ணயம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மாநகர சபை தீர்மானித்துள்ளது.  
 
கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று புதன்கிழமை (24) பிற்பகல் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றபோதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
இவ்விடயம் குறித்து பிரஸ்தாபித்த உறுப்பினர் பி.எம்.ஷிபான், தனியாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மலசல கழிவகற்றலுக்காக ஒவ்வொரு வீட்டுக்கும் பெருந்தொகை பணம் அறவிடப்படுவதாக சுட்டிக்காட்டியதுடன், இதனைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
 
இது குறித்து சில மாதங்களுக்கு முன் கவனம் செலுத்தப்பட்டு, சம்மந்தப்பட்ட தரப்பினருடன் பேசித் தீர்வு காண்பதற்காக உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் பொறுப்பாக்கப்பட்டிருந்தார் எனத் தெரிவித்த முதல்வர், அது தொடர்பில் விளக்கமளிக்குமாறு அவரிடம் கேட்டுக்கொண்டார்.
 
தான் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து உறுப்பினர் அமீர் சபைக்கு விபரித்ததையடுத்து, இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தேவையான நவடிக்கைகளை விரைவாக முன்னெடுப்பதென தீர்மானிக்கப்பட்டதுடன் விரைவில் அதற்குரிய குழுக்கூட்டமொன்றை நடத்துமாறு முதல்வர் அறிவுறுத்தினார்.
 
அதேவேளை குழாய்நீர் இணைப்புக்காக வீதிகளில் தோண்டப்படும் குழிகளை உடனுக்குடன் செப்பனிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இதன்போது முதல்வர் சுட்டிக்காட்டினார்.

Related posts