காடுமண்டிதூர்ந்துகிடக்கும் புராதனஆலயத்தை பார்க்க படையெடுக்கும் பக்தர்கள்.அம்பாறை மாவட்ட மேலதிக அரசஅதிபர் ஜெகதீசன் குழுவினரும் விஜயம் !

காடுமண்டி தூர்ந்து சிதைவடைந்து கிடக்கும் புராதன ஆலயமொன்றைப் பார்க்க பக்தர்கள் படையெடுத்தவண்ணமுள்ளனர்.
 
பலநூற்றாண்டுகாலம் பழைமைவாய்ந்த நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயத்தின் புராதன ஆலயமே இவ்வாறு காடுமண்டி புதர்பிடித்து சிதைந்து அழிவுற்றநிலையில் காணப்படுகிறது.
 
அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூர் பிரதேசத்திற்குட்பட்ட வயற்பிரதேசத்தில் இப்பழம்பெரும் ஆலயம் காணப்படுகிறது.அருகில் தற்போதைய ஆலயம் மரங்களால் நிறைந்த சோலையில் உள்ளது. பூரணைதினங்களில் அங்கு கூடும் பக்தர்களுக்கு அளவேயில்லை.அதனருகே புதிதாக கட்டப்பட்ட ஆலயம் விரைவில் குடுமுழுக்கு காணவிருக்கிறது.
 
 
இந்நிலையில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கடந்தவாரம் அங்கு விஜயம்செய்து இப்புராதன ஆலயத்தைப் பார்வையிட்டார்.  அவருடன் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் ,கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ,இந்துசமயவிருத்திச்சங்கததின் முன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜா ,இந்துசமயகலாசார மாவட்ட உத்தியோகத்தர் கு.ஜெயராஜி உள்ளிட்ட பிரமுகர்கள் அதனைப்பார்வையிட்டனர்.
 
இது சோழர்கால ஆலயத்தின் சிதைவுகளாக இருக்கலாமென கருத்து தெரிவிக்கப்பட்டதுடன் இது புராதன சின்னமாக பேணிப்பாதுகாக்கப்படவேண்டியதன் அவசியம் பற்றியும் கூறப்பட்டது. அதிலுள்ள செங்கல்லின் அளவு வழமையான செங்கல்லின் அளவைவிட பருமனானது.
 
அருகிலுள்ள பாம்புப்புற்றில் 16அடி நாகபாம்பு உள்ளது.அதனையும் பார்வையிட்டார். ஆலயத்தலைவர் கோ.கமலநாதன் பாம்புக்கு பால் வார்ப்பதையும் பராமரிப்பினையும் விபரித்தார்.
கூடவே பக்தர்கள் சிலரும் சென்றிருந்தனர். காடுமண்டிக்கிடக்கும் அப்புராதன ஆலயத்தைக்கண்டு ஆச்சரியப்பட்டார்கள்.

Related posts