கிட்டங்கி வீதியில் வெள்ளம் பாய்கின்றது. நாவிதன்வெளி பிரதேச செயலகம் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு.

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளியையும்,கல்முனையையும் இணைக்கும் கிட்டங்கி வீதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக சுமார் 2அடியில் வெள்ளநீர் பாய்கின்றது.இதனால் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு கல்முனை ஊடாக வருகைதரும் பொதுமக்களும்,அதேவேளை கல்முனைக்கு செல்லும் நாவிதன்வெளி பிரதேச பொதுமக்களும் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் கிட்டங்கி வீதியூடாக பயணித்து வருகின்றார்கள்.

தொடர்ச்சியாக வெள்ளம் பாய்வதால் வைத்தியசாலைக்கு,சந்தைக்கு,வியாபாரத்திற்கு, வயலுக்கு செல்லும் பொதுமக்கள்,அரசாங்க ஊழியர்கள்,குழந்தைகள்,அச்சத்துடன் பயணிக்கின்றார்கள்.இதனை கருத்திற்கொண்டு நாவிதன்வெளி பிரதேச செயலாளர்,அனர்த்த முகாமைத்துவ கட்டுப்பாடு பிரிவினர்கள் போக்குவரத்துக்காக கஸ்டப்படும் பொதுமக்களின் நன்மைகருதி போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி பொதுமக்களின் போக்குவரத்தை சீர்செய்து வருகின்றார்கள்.உழவு இயந்திரத்தில் குறித்த வீதியில் போக்குவரத்துக்காக அச்சப்படும் பொதுமக்களை மீட்டெடுத்து இலவசமான போக்குவரத்து வசதிகளை செய்து வருகின்றார்கள்.

இவ்வீதியில் சுமார் 300மீற்றர் நீளமான பாதையிலே வெள்ளநீர் பாய்கின்றது.தொடர்ச்சியாக பெய்து வருடம் அடை மழைகாரணமாக கிடங்கி வீதியானது வெள்ளத்தில் மூழ்குவது குறிப்பிடத்தக்கதாகும்.இவ்வீதிக்கு மேம்பாலம் அமைப்பதற்கான வேலையை அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவர்,வீதி அபிவிருத்தி திணைக்கள நிறைவேற்றுப் பொறியியலாளர்,ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர்கள் துரித கதியில் முன்னேடுக்க வேண்டுமென கிட்டங்கி வீதியில் பயணிப்போர் உறுதியான கோரிக்கையை முன்வைக்கின்றார்கள்.

Related posts