கிழக்கு மாகாணத்தில் கொவிட் தொற்றின் மூன்றாம் அலையில் 125 மரணங்கள் பதிவாகியுள்ளது

எதிர்வரும் வாரத்தில் கிழக்கு மாகாணத்தில் கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. மூன்று தொகுதியினராக வகைப்படுத்தி இத்தடுப்பூசியினை நாம் வழங்குவதற்கு திட்டங்களை வகுத்துள்ளோம். இம்மாகாணத்தில் உள்ள தொற்றா நோயாளர்களுக்கு இத்தடுப்பூசியினை முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் மூலம் கிழக்கு மாகாணத்திற்கு வழங்கப்படவுள்ள சைனோபாம் தடுப்பூசியினை பெரும்பாலான பொதுமக்களுக்கு வழங்குவதற்காக உத்தேசித்துள்ளோம். மூன்று வயதினராக வகைப்படுத்தி அத்தடுப்பூசிகளை வழங்கப்படவுள்ளதோடு, அவர்களுள் நாட்பட்ட நோயாளர்களாகவுள்ள தொற்றா நோயாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசியினை செலுத்துவதற்காகவும் உத்தேசித்துள்ளோம். அத்தோடு அரச ஊழியர்கள். கர்ப்பினிகள், முன்னணி செயற்பாட்டாளர்கள் போன்றோருக்கும் இத்தடுப்பூசியினை வழங்க உத்தேசித்துள்ளோம்.
தொற்றா நோயாளர்களுக்கு இலகுவில் கொவிட் தொற்று ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதால் இந்நோயாளர்கள் கூடியளவு முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டியுள்ளது. இந்நோயானது தொற்றா நோயார்களுக்கு பல்வேறான பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதோடு, இந்நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகும் தொற்றா நோயார்களை பராமரிக்கின்றபோது பல்வேறான நடைமுறைச் சிக்கல்களையும் சுகாதாரத் துறையினர் முகம் கொடுத்தும் வருகின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் கொவிட் தொற்று காரணமாக இதுவரை 9500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றுள்ள கொவிட் தொற்றின் மூன்றாம் அலையின்போது சுமார் 5600 பேர் இம்மாகாணத்தில் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் இந்நோய்த் தொற்று காரணமாக 2500 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 1600 பேரும், அம்பாறை சுகாதார சேவைகள் பணிமணை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 1246 பேரும், கல்முனை சுகாதார சேவைகள் பணிமனை அதிகார எல்லைக்குள் 257 பேரும் இந்நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
கொவிட் தொற்றின் மூன்றாம் அலையின் போது கிழக்கு மாகாணத்தில் பெருந் தொகையானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறிய நிலப்பரப்பில் கூடியளவு மக்கள் தொகையினர் இம்மாகாணத்தில் செறிந்து வாழ்வது இதற்கு பிரதான காரணமாக உள்ளது.
கடந்த ஒரு வார காலப்பகுதியினுள் சுமார் 1500 பேர் கொவிட் தொற்றுக்க இலக்காகியுள்ளனர். கடந்த ஒரு வார காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கூடுதலான தொகையினர் இத்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 712 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் 450 பேரும், அம்பாறை சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியால எல்லைக்குள் 232 பேரும், கல்முனை சுகாதார சேவைகள் பணி மனை எல்லைக்குள் 105 பேரும் இந்நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
கொவிட் தொற்றின் மூன்றாம் அலையின் போது கிழக்கு மாகாணத்தில் 125 மரணங்கள் பதிவாகியுள்ளது. மூன்றாம் அலையின் அதிகூடுதலான மரணங்கள் திருகோணமலையில் பதிவாகியுள்ளது. இம்மாவட்டத்தில் 80 மரணங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 பேரும், அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் 13 மரணங்களும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகார எல்லைக்குள் ஐந்து மரணங்களும் பதிவாகியுள்ளதால் கிழக்கு மாகாண மக்கள் மிகுந்த அவதானத்துடன் சுகாதர நடைமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் மேலும் தெரிவித்தார்.
 
இதன்படி திருகோணமலை சுகாதாரப் பிராந்தியத்தில் 12 பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 230 கிராம சேவகர் பிரிவுகள் காணப்படுகின்றன.
இவற்றில் மூன்றாவது கோவிட் அலையினால் பாதிக்கப்பட்டு ஆபத்தான வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள 153 கிராம சேவகர் பிரிவுகளுக்கும் தடுப்பூசி செலுத்த முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
அதன்படி கிண்ணியாஇ குறிஞ்சாக்கேணிஇ திருகோணமலைஇ மூதூர் மற்றும் உப்புவெளி ஆகிய சுகாதாரப் பிரிவுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்தப் பிரிவில் 30 தொடக்கம் 60 வயதுக்குட்பட்ட 29486 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாகவம்இ இதற்காக 229 தடுப்பூசி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related posts