கிழக்கு மாகாணத்தில் பரவி வரும் ஒருவகை வயிற்றோட்டம்!விசேட குழந்தை நல வைத்திய நிபுணர் டாக்டர் விஜி திருக்குமார்.

கிழக்கு மாகாணத்தின் சில இடங்களில் குறிப்பாக ஓட்டமாவடி ,வாழைச்சேனை மற்றும் ஏறாவூர் பகுதிகளில் இருந்து வயிற்றோட்டம் காரணமாக அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சிறுவர்கள் மாத்திரம் இன்றி பெரியவர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். அவதானம் தேவை.
 
இவ்வாறு கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஸ்ட விரிவுரையாளரும்   மட்.போதனா வைத்தியசாலையின்  விசேட குழந்தை நல வைத்திய நிபுணருமான டாக்டர் விஜி திருக்குமார் தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்:
 
இதன் அறிகுறிகளாக காய்ச்சல், சத்தி மற்றும் வயிற்றோட்டம் காணப்படும். சில சமயம் இரத்தம் கலந்த சளியுடன் வயிற்றோட்டம் காணப்படும். இது ஒருவகை பற்றீரியா தொற்றினால் ஏற்படுகிறது.
சில சமயம் வயிற்றோட்டம் இல்லாமல் அல்லது குறைவாகவும் சத்தி, வயிற்று வலி மற்றும் வயிறு ஊதுதல் போன்ற குணங்குறிகளுடன் தோன்றலாம்.
 
பிள்ளை ஆகாரம்,நீர் அருந்துவது குறைவாகவும் நீர் இழப்பு அதிகமாகவும் இருப்பதால் சோர்வு மற்றும் மயக்க நிலை ஏற்படும். 
 
எனவே இவ்வாறான அறிகுறிகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் வைத்தியசாலையை நாடுவது அவசியம்.
 
மேலும் கொரோனா தொற்றின் பின் சிறுவர்களுக்கு ஏற்படுகின்ற Miss-Cஎனப்படும் பல்தொகுதி அழற்சி நோய் நிலையின் போதும் காய்ச்சல் வயிற்றோட்டம் போன்ற அறிகுறிகள் தோன்றும். எனவே உங்கள் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு காணப்படுமாயின் விரைவாக வைத்தியசாலையை நாடுதல் சாலச்சிறந்தது.

Related posts