கிழக்கு மாகாண ஆளுநருக்கு இருக்கும் அக்கறையானது தமிழ் அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஏற்பட வேண்டும்

கிழக்கு மாகாண ஆளுநருக்கு இருக்கும் அக்கறையானது தமிழ் அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஏற்பட வேண்டும்.தேர்தல்காலங்களில் வீராப்பு,வீரவசனம் பேசி மக்களின் வாக்குகளை அபகரிப்போர் தேர்தல்கள் முடிந்தவுடன் பொதுமக்களை மறந்து செயற்படும் நிலை தமிழ் அரசியல் தலைமைகளிடம் காணப்படுவது வேதனையளிக்கின்றது.இப்போதய கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகமவுக்கு இருக்கும் அக்கறை தமிழரின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு பன்மடங்கு ஏற்பட வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உள்ளுராட்சிசபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகல்லாகமவினால் திருமலை அலுவலகத்தில் சந்தித்த போது மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக எம்மால் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டார்.முன்னால் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தனால் 2012ம் ஆண்டு காலப்பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்டு அரைவாசிக்கு மேல் வேலைத்திட்டங்கள் பூர்த்தியாக்கப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றத்தினால் நிதி ஒதுக்கீடு இன்மையால் கைவிடப்பட்டு காணப்படுகின்ற இலங்கையிலேயே மிக பிரம்மாண்டமான பொது நூலகம் தொடர்பான கேட்கப்பட்ட போது ஒருவருட காலத்திற்குள் தான் அந்த நூலகத்தினை பூர்த்தி செய்து மக்களின் பாவனைக்காக கையளிப்பதற்காகவும், பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு முடிவுறும் தறுவாயிலுள்ளதாகவும் குறிப்பிட்ட ஆளுநர் கட்டுமானம், தளபாடங்களுக்கும் மேலதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் வரலாற்று சிறப்பு மிக்க மூர்த்தி,தலம், தீர்த்தம் என மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற மாமாங்கேஸ்வரர் ஆலயத்தினை வெளி மாவட்டம், நாடுகளில் இருந்து வருபவர்களும் அதன் புனிதத்துவத்தினை பறைசாற்றும் வகையில் அபிவிருத்தி செய்யப்போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.தமிழர்களின் பிரதிநிதிகள் தாம் என தம்பட்டம் அடித்து தேர்தல் காலத்தில் மட்டும் வீரம் பேசும் அரசியல் தலைமைகள் பலர் மட்டக்களப்பு பொது நூலகத்தினை பூர்த்தி செய்தால் பிள்ளையானுக்கு பெயர் கிடைத்து விடுமோ என நினைத்து ஊடக அறிக்கைகளும், கடித போக்குவரத்துடனும்  நிறுத்தி விட்டு வேடிக்கை பார்க்கும் துர்பாக்கிய நிலை மட்டக்களப்பில் மாத்திரம் தான் மிக மோசமான முன் உதாரணமாக அமைந்துள்ளது.

மட்டக்களப்பு நகரை பாருங்கள் ஆறு மாதத்தில் சந்திரகாந்தனால் கட்டி முடிக்கப்பட்ட பொதுப் பேருந்து நிலையம் ஆனால் அதன்  நேரம் காட்டும் கடிகாரம் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக 09.25 மணியே காட்டி நிற்கின்றது. அழகாக வளைந்தோடும் ஆற்றங்கரை ஓரங்களில் அமைக்கப்பட்ட நிழல் கூடாரங்களின் நிலை எப்படி உள்ளது? எனவே அரசியல் தலைமைகள் அரசியல் பழிவாங்கலுக்கு நேரம் செலவு செய்வதை விடுத்து மக்கள் நலன் சார்ந்து சிந்திக்க வேண்டும்.

அரசியல் பேதம் கடந்து இனங்களுக்கிடையே நில,நிர்வாக,நிதி சம பங்கீடுகளில் இதய சுத்தியுடன் சேவை புரிய முன்வரும் தலைமைகளை ஒருபோதும் வரலாறு குறைகூறாது எனவும் குறிப்பிட்டார்.

Related posts