கொரோனாவால் உயிரிழந்த சமுகசேவையாளர் லயன் தங்கவேலிற்கு காரைதீவு மணிமண்டபத்தில் ஆத்மார்த்த பிரார்த்தனை:அஞ்சலி!

கொரோனாவால் உயிரிழந்த காரைதீவைச்சேர்ந்த பிரபல சமுகசேவையாளர், தேசமான்ய விபுலநேசன் லயன் சின்னதம்பி தங்கவேல் (வயது 75) அவர்களுக்கு ஆத்மார்த்த பிரார்த்தனையும் ,இறுதி அஞ்சலி நிகழ்வும் காரைதீவில் நடைபெற்றது.
 
காரைதீவு விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றத்தின் ஏற்பாட்டில் நேற்று(5)மாலை இந்நிகழ்வு, சுகாதாரமுறைப்படி நடைபெற்றது.அன்னார் நேற்ற காலை 5.30மணியளவில் இறைபதமடைந்து, அன்றுமாலை 4.30மணியளவில் அம்பாறையில் தகனம்செய்யப்பட்டமை குறிப்பிடத்தகக்து.
 
 
மன்றத்தின் உபதலைவர் சோ.ஸூரநுதன் தலைமையில், பணிமன்றத்தின் முன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜாவின் நெறிப்படுத்தலில் இந்நிகழ்வு மன்றச்செயலாளர் கு.ஜெயராஜியின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.
 
நிகழ்வில் தவிசாளர்,  ஆலயத்தலைவர்கள், பணிமன்றத்தினர் என மட்டுப்படுத்தப்பட்டளவில் சில பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
 
முன்னதாக சிவபுராணம் ஓதப்பட்டு, அன்னாரின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு ,புஸ்பாஞ்சலி செலுத்தப்பட்டது. இராமகிருஸ்ணபாரம்பரியத்தின்படி தீட்சைபெற்ற அன்னாருக்கு ,பாராயணம் ஓதி பஞ்சராத்தி காட்டப்பட்டது.
 
பின்னர் இரங்கலுரைகளை காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கே.ஜெயசிறில், ஆலய தர்மகர்த்தாக்களான இ.குணசிங்கம், சி.நந்தேஸ்வரன், க.ஆறுமுகம், எஸ்.மணிமாறன், பணிமன்றம் சார்பில் முன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜா, செயலாளர் கு.ஜெயராஜி, பொருளாளர் மு.ரமணீதரன், கணக்காய்வாளர் வி.குலேந்திரன், அன்னாரின் குடும்பத்தின் சார்பில் ஆ.பூபாலரெத்தினம் ,கி.சசிகரபவான் ஆகியோரும் நிகழ்த்தினர்.
 
அன்னாரின் இழப்பு காரைதீவு மண்ணுக்கு பேரிழப்பு என்றும் ,சகலதுறைகளிலும் அவராற்றிய சமுகசேவைகள் பற்றியும் சகலரும் விலாவாரியாக உரையாற்றினர்.
 
நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது ,மாலை 4.30மணியளவில் அன்னாரது பூதவுடல் அம்பாறையில் எரியூட்டும் நிலையத்தில் எரியூட்டப்படுவதை நிகழ்நிலையில் ஒளிபரப்பட்டதும், அனைவரும் எழுந்துநின்று 2நிமிடநேரம் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.
 
அவரது உருவப்படம் தாங்கிய பதாதை மணிமண்டப முகப்பில் தொங்கவிடப்பட்டுள்ளது. பின்னர் விபுலாநந்தவீதியிலுள்ள தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவரது வீட்டின் முன்னால் சென்ற பணிமன்றத்தினர் ,வீதியில்நின்றவாறு  அஞ்சலி செலுத்தி விடைபெற்றனர்.
 
ஓய்வுநிலைப் பொறியியலாளரான இவர், காரைதீவு விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றத்தின் ஸ்தாபக உறுப்பினராகவும், செயலாளராகவும்,  ஆலோசகராகவும் ,காரைதீவு ஓய்வூதியர்சங்கத்தின் தலைவராகவும், பிரதேச நல்லிணக்ககுழுவின் தலைவராகவும் ,கல்முனை லயன்ஸ்கழகத் தலைவராகவும், மற்றும் பல முன்னணி அமைப்புகளில் பிரதான பாகமெடுத்து சேவையாற்றிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts