கொரோனா அதீதபரவல் காரணமாக வெளிநோயாளர்களை வெளியில்வைத்தே சிகிச்சையளிக்கும்முறை ஆரம்பம்!

கொரோனா தீநுண்மியின் அதீத தொற்றுதல் காரணமாக, வைத்தியசாலைகளில் வெளிநோயாளர்களை வெளியில்வைத்து சிகிச்சையளிக்கும் பொறிமுறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது.
 
கல்முனைப்பிராந்தியத்திலுள்ள காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் ,இவ்விதம் தினமும் வெளிநோயாளர்கள் வெளியில் பாதுகாப்பாக வைத்து சிகிச்சையளித்துவருகிறார்கள்.
 
வைத்தியசாலையின் முன் வாயிலில் பாதுகாப்பான கருமபீடம் அமைத்து வெளிநோயாளர்  பதிவு தொடக்கம் சிகிச்சை வரை நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றன. மருந்துவழங்கல் பிரத்தியேக கருமபீடத்தில் வழமைப்பிரகாரம் நடைபெறுகிறது.
 
அங்கு வைத்தியசாலைப்பொறுப்பதிகாரி டாக்டர் நடராஜா அருந்திரன் ,வைத்தியஅதிகாரி திருமதி டாக்டர் சாந்தினி விவேகானந்தராஜா ஆகியோர் பொதுமக்களை கவனித்து சிகிச்சையளிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்ததைக்காணமுடிந்தது.
 
பொதுமக்களும் முகக்கவசத்துடன் சமுகஇடைவெளியைப்பேணியவாறு வரிசையில் அமர்ந்திருந்து மருந்தைப்பெற்றுச்செல்கின்றனர். கிளினிக் நடைமுறையும் இம்முறையிலேயே நடைபெறுகிறது.
 
சந்தேகத்திற்கிடமாணவர்களுக்கு அன்ரிஜன் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. விடுதிகளில் தங்கவைக்கப்படுவோரும் அன்ரிஜன்சோதனையின்பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
 
இதுதொடர்பாக வைத்தியசாலை பொறுப்பதிகாரி டாக்டர் ந.அருந்திரனிடம் கேட்டபோது :
 
“தினமும் 100பேருக்கு மேல் வெளிநோயாளர் பிரிவுக்கு வந்துகொண்டிருந்தனர். எனினும், அண்மைய அதீததொற்று பரவல் காரணமாக நிலவுகின்ற பீதியினால் வைத்தியசாலைக்குவரும் நோயாளிகளின் எண்ணிக்கை சற்றுகுறைவடைந்துள்ளது. விடுதிகளில் வழமையாக 50பேரளவில் தங்கிசிகிச்சை பெறுவார்கள். அங்கும் தற்போது குறைந்துள்ளது.”என்றார்.

Related posts