சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட கால்நடைகள் பொலிஸாரினால் பறிமுதல்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாற்பதாம் கட்டைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக லொறி ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட கால்நடைகளை நேற்று மாலை கைப்பற்றியுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து அக்கரைப்பற்று-பொத்துவில் பிரதான வீதியின் நாற்பதாம் கட்டைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றி வளைப்பில் இக்கால்நடைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கே.எம்.இப்றாஹீம் தெரிவித்தார்.

மொனராகலைப் பிரதேசத்திலிருந்து அக்கரைப்பற்று பகுதிக்கு சட்ட விரோதமாக லொறியொன்றில் சூட்சுமான முறையில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட 18 மாடுகள் இதன்போது கண்டு பிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளன. லொறியினை செலுத்தி வந்த சாரதியும் அதன் உதவியாளரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீண்ட காலமாக இவ்வாறான குற்றச் செயல்களில் இந்நபர்கள் ஈடுபட்டு வந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையின்போது தெரிய வந்ததாகவும், கைப்பற்றப்பட்ட கால்நடைகள் சகிதம் அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts