சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட நிர்மாணத்தை அகற்றிய போது முறுகல்நிலை

அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்ட மாளிகைக்காடு மேற்கில் அமைந்துள்ள நூரா பின்த் மத்ரஸாவின் முன்பகுதியில் நுழைவாயில் அழகுக்காக அமைக்கப்பட்டிருந்த ஒரு பகுதி பிரதான வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டதாக கூறி  அந்நிர்மாணிப்பை அகற்றும் போது வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்களுக்கும் அந்த மத்ரஸாவின் தலைவர் சட்டத்தரணி எம்.சி ஆதம்பாவாவுக்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு மாளிகைக்காடு பிரதான வீதியில் சிறிய பதற்ற நிலை இன்று காலையில் ஏற்பட்டது.
 
இதனால் பிரதான வீதியில் பொதுமக்கள் கூடியதுடன் சுகாதார நெருக்கடி ஏற்பட்டதை அறிந்து காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஜீவராணி சிவசுப்பிரமணியம், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், சம்மாந்துறை பொலிஸார் என பலரும் களத்துக்கு நேரில் விஜயம் செய்து சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன் சம்பந்தப்பட்ட தரப்பினர்களிடையே பரஸ்பரத்தை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டனர்.
 
இதை அடுத்து ஒரு விதமான பதற்ற நிலை ஏற்பட்டதை தொடர்ந்து சம்மாந்துறை பொலிஸ், இராணுவம் ஆகியோர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களினால் அந்நிர்மானம் உடைத்து அகற்றப்பட்டது.

Related posts