சத்துருக்கொண்டான் கருத்தரங்கில் கலந்து கொண்டோரில் பலருக்கு கொரோனா!ஏனையோர் தனிமைப்படுத்தலில்: உதவிப்பணிப்பாளருக்கும் கொரோனா!

கிழக்கு மாகாண விவசாயத்திணைக்களம் சத்துருக்கொண்டானில் நடாத்திய விவசாய சேதனைப்பசளை தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொண்ட அரசஅலுவலர்களில் பலருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
மேலும் கருத்தரங்கில் கலந்துகொண்ட பலர் அவரவர் வீடுகளில் தற்சமயம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
 
இதுதொடர்பாக மட்டு.பிரதேச சுகாதாரவைத்தியஅதிகாரி டாக்டர் கிருபைராஜா கிரிசுதனிடம் கேட்டபோது: கருத்தரங்கில் கலந்துகொண்டோரில் எனது பிரிவுக்குள் 21 அரசகளஉத்தியோகத்தர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அவர்களுக்கான சிகிச்சை ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
 
அதேவேளை கருத்தரங்கில் ஆரையம்பதியைச்சேர்ந்த விவசாயத்திணைக்கள உதவிப்பணிப்பாளரொருவரும் நேற்றையதினம் கொரோனாத் தொற்றுக்கிலக்கானது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
 
ஆரம்பத்தில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த களஅலுவலர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து ஏனையோர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதில் எனது பகுதியில் அறுவர் இனங்காணப்பட்டுள்ளனர். ஏனைய பகுதிகளில் எத்தனைபேர் தொற்றுக்கிலக்காகியுள்ளனர் என்பது பற்றி எனக்குத் தெரியாது என்றார்.
 
குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டவருக்கு காய்ச்சல் தலையிடி சளி பிரச்சினை காட்டியதால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. மொத்தமாக 60பேரளவில் தொற்றுக்கிலக்காகியிருக்கலாமெனக்கூறப்பட்டபோதிலும் அது நம்பகமாக ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை.
 
மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய நீர்ப்பாசன கள அலுவலர்களுக்கான ஜந்துநாள் “ திரிசாற குருஷிசங்குருத்திய” விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்ட கருத்தரங்கு கடந்த 2ஆம் திகதி திங்கள் முதல் 6ஆம் திகதி வெள்ளிவரை நடைபெற்றது.
 
விவசாயத்திணைக்கள விவசாய போதனாசிரியர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நீர்ப்பாசனத்திணைக்கள களஅலுவலர்கள் கமநலஅபிவிருத்திஉத்தியோகத்தர்கள் என 170பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.
 
குறித்த கருத்தரங்கு சத்துருக்கொண்டான் சர்வோதய கருத்தரங்கு மண்டபத்தில் நடைபெற்றது. கலந்துகொள்ள அழைக்கப்பட்ட 170களஅலுவலர்களும் இரண்டாகப்பிரிக்கப்பட்டு இரு வேறு மண்டபங்களில் நடாத்தப்பட்டன. அதில் ஒரு மண்டபம் குளிருட்டப்பட்டது. ஒருமண்டபத்திற்கு விவசாய பிரதிப்பணிப்பாளர் வி.பேரின்பராஜாவும் மறுமண்டபத்திற்கு விவசாய அபிவிருத்திதிணைக்கள் உதவிஆணையாளர் கே.ஜெகந்நாத்தும் பொறுப்பாகநியமிக்கப்பட்டிருந்தனர்.
 
முதல்நாள் நிகழ்வை கிழக்குமாகாண விவசாயஅமைச்சின் செயலாளர் திருமதி கலாமதிபத்மராஜா கலந்துகொண்டு ஆரம்பித்திருந்தார்.நிறைவுநாளன்று கிழக்குமாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் கலந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts