சபாநாயகருக்கு மஹிந்தவின் கடிதம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தை நடத்துமாறு, எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே, அவர் இவ்வாறு கோரியுள்ளார்.

“உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதல்களால், உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரஜைகள் உள்ளடங்களாக சுமார் 300 பேர் வரையில் கொல்லப்பட்டும் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நிர்கதியாகியுள்ளனர்.

“அதேவேளை, நாட்டுக்குக் கூடியளவில் அந்நிய செலவாணியை ஈட்டித்தரும் சுற்றுலாத்துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், சுற்றுலாத்துறையை அடிப்படையாகக் கொண்ட குடும்பங்கள் நிர்கதியாகியுள்ளன.

“இதேபோன்று தினசரி ஊதியத்தைக் கொண்டு வாழ்வாதாரத்தைக் கொண்டுசெல்லும் இலட்சக்கணக்கான மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டு முதலீடுகளும் கேள்விக்குறியாகி உள்ளன.

“எனவே, இந்த விடயங்களைக் கருத்திற்கொண்டு, இம்மாதம் 7ஆம் திகதி மாலை 5.30 தொடக்கம் 7.30 மணி வரை  கூடவுள்ள நாடாளுன்ற அமர்வின் போதான ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தை, அன்றைய தினம் பிற்பகல் 1 மணி முதல் 7.30 மணி வரை நடத்துமாறு கேட்டுக்கொள்வதாக, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Related posts