சர்வதேசத்திடம் நீதியைக் கேட்டு ஏமாற்றமும் அலைச்சலும் தான் தொடருகின்றது… (முன்னாள் பா.உ – பா.அரியநேத்திரன்)

(சுமன்)

உண்மையான சர்வதேசம் எனின் இவ்வாறான அச்சறுத்தல்கள் ஊடகவியலாளர்களுக்கு இடம்பெறுகின்ற போது அதற்கான பிரதிபலிப்பினைக் காட்டி நீதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், ஏமாற்றமும் அலைச்சலும் தான் எங்களுக்குத் தொடருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

வடகிழக்கில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவித்தும், நீதி கோரியும் இன்றையதினம் மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டிலே தமிழ் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் தொடர்ச்சியாக இருந்து வருகின்ற விடயம். தற்போதைய ஜனாதிபதியின் அண்ணன் ஜனாதிபதியா இருந்த காலத்திலும் நாங்கள் பல ஊடகவியலாளர்களைப் பலி கொடுத்திருக்கின்றோம். சுமார் 45 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதில் 36 பேர் தமிழ் ஊடகவியலாளர்கள்.

தற்போதைய அரசாங்கம் பாராம் எடுக்கும் போது ஊடக சுதந்திரம் மதிக்கப்படும், ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு வழங்கப்படும் என்ற செய்தியையே சொல்லியிருந்தார்கள். ஆனால் அதன் செயற்பாடுகளைப் பாhத்தால் தொடச்சியாக ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதும், தாக்கப்படுவதுமாகவுமே இருக்கின்றது.

நேற்யை தினம் நடைபெற்ற சம்பவம் பாராதூரமான மனித உரிமை மீறல் என்பதைச் சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும். 2009ம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்ட காலத்தில் இருந்து சர்வதேசத்திடம் நாம் பலவற்றைத் தெரிவித்திருக்கின்றோம். தற்போது யுத்தமற்ற சூழலொன்று நடைபெறுகின்றது. இதன் போதும் பலவிதமான அச்சுறுத்தல்கள் இருக்கின்றதென்பதை எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். அத்தோடு ஊடகவியலாளர்களும் இது தொடர்பில் தெரியப்படுத்தி இருக்கின்றார்கள். ஆனால் சர்வதேசம் அழுத்தம் கொடுக்கின்றதா? மௌனம் காக்கின்றதா என்பது தெரியவில்லை.

உண்மையான சர்வதேசம் எனின் இவ்வாறான அச்சறுத்தல்கள் ஊடகவியலாளர்களுக்கு இடம்பெறுகின்ற போது அதற்கான பிரதிபலிப்பினைக் காட்டி நீதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறே மனித உரிமைச் செயற்பாடுகள் மாத்திரமல்லாமல் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கான நீதியையும் கேட்டு நிற்கின்றோம். இதுவரைக்கும் அதற்கான நீதி சர்வதேசத்தினூடாக எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனால் ஏமாற்றமும் அலைச்சலும் தான் எங்களுக்குத் தொடருகின்றது.

எனவே இந்தப் போராட்டத்தின் மூலம் சர்வதேசத்திற்கு ஒரு பார்வையைக் கொடுக்க வேண்டும். சர்வதேசம் இலங்கைக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும். அதனூடாக இனியாவது ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது. இறந்த பொதுமக்களை நினைவு கூருவதற்கான உரிமை தமிழ் மக்களுக்கு இருக்கின்றது என்ற செய்தியை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறான அச்சுறுத்தல்கள் இனியும் தொடருமாக இருந்தால் இந்தப் போராட்டத்தைத் தொடர்சியாக முன்கொண்டு செல்வதைத் தவிர எங்களுக்கு மாற்றுவழி இல்லை என்று தெரிவித்தார்.

Related posts