சிறப்பாக இடம்பெற்ற உகந்தமலை முருகனாலயகொடியேற்றம்.

கிழக்கின் தென்கோடியிலுள்ள வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை முருகனாலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா உற்சவத்தின் கொடியேற்றத்திருவிழா நேற்று(21)செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
 
உகந்தமலைமுருகனாலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் இவ்வருட கொடியேற்றத்திருவிழா நேற்று காலை 11.40 மணியளவில் பக்தர்கள் புடைசூழ ‘அரோஹரா’ கோசத்தின் மத்தியில் நடைபெற்றது.
 
கொரோனா தொற்று அச்சம் காரணமாக ஆலயங்களின் திருவிழா பக்தர்களின் வருகை என்பன மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக ஆலயத் தலைவர் சுதுநிலமே திசாநாயக்க(சுதா) ஏலவே கூறியுள்ளனர்.
 
நேற்று மாவட்டத்தின் பல பாகங்களிலுமிருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆலயத்தில் ஒன்றுகூடினர். எனினும் வழமையான அன்னதான நிகழ்வுகள் இடம்பெறவில்லை.
 
கொடியேற்றம் இடம்பெற்று 15நாள் திருவிழாவின் பின்னர் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி சமுத்திர தீர்த்தோற்சவத்துடன் ஆடிவேல்விழா நிறைவடையவுள்ளது.
 
உகந்தமலைமுருகனாலய வண்ணக்கர் ஜே.எஸ்.டி.எம்.சுதுநிலமே திசாநாயக்க(சுதா) கூறுகையில்:
இம்முறை ஆடிவேல்விழா உற்சவம் குறைந்தளவு பக்தர்களுடன் அதாவது தினமொன்றுக்கு 200 பக்தர்களுடன் நடாத்த ஆரம்பக்குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அன்னதானம் பாதயாத்திரை என்பன முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளன.
 
பகல் திருவிழா காலை 7மணிமுதலும் இரவுத்திருவிழா மாலை 5மணிமுதலும் நடைபெறவுள்ளன. திருவிழா உபயகாரர்கள் 50பேரளவில் இரவில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவர். திருவிழாக்காலங்களில் ஏனைய பக்தர்கள் இரவில் தங்கஅனுமதியில்லை. பக்தர்கள் ஒத்துழைக்குமாறு வேண்டுகிறேன். என்றார்.

Related posts