சுதேச மருத்துவ பீடத்தில் பட்டம் பெற்றவர்களில் தற்போதைய நிலை என்ன?

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் 01.04.2024. சுதேச மருத்துவ பீடத்தில் பட்டம் பெற்றவர்களில் தற்போதைய நிலை என்ன?

 
இலங்கையில் சுதேச மருத்துவ பீடத்தில் பட்டம் பெற்றவர்களில் நாடளாவிய ரீதியில் சுமார் 1650 பட்டதாரிகள் அரசாங்க நியமனம் இன்றியும் எதிர்காலமும் இல்லாமல், அவர்களின் அன்றாடம் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
 
சுதேச மருத்துவத் துறையானது ஆயுர்வேதம், சித்தா மற்றும் யுனானி ஆகிய மூன்று துறைகளையும் உள்ளடக்கியது. சித்த மருத்துவப் பாடத்திட்டத்தில் 5 ஆண்டுகள் இளங்கலைக் கல்வியும் அதன்பின் ஓராண்டு இன்டர்ன்ஷிப்பும் உள்ளது. எவ்வாறாயினும் உண்மையில் முடிவடையும் நேரத்தில் 7- 8 ஆண்டுகள் வரை நீடித்து செல்கின்றது.
 
இவர்களது அறிவு, திறமை மற்றும் சேவைகள் நாட்டுக்கு பயன்படாமல் வீணடிக்கப்படுகிறது. அதே நேரத்தில், பல ஆயுர்வேத மருத்துவமனைகள் மருத்துவர்கள் பற்றாக்குறையுடன் இயங்கி வருகின்றன, மேலும் பொதுமக்களுக்கு தரமான சேவைகளை வழங்க முடியவில்லை.
 
இதுதவிர, பொதுமக்கள் பலர் தங்களை ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவர்கள் என்று கூறிக்கொள்ளும் போலி நபர்களை அணுகி வருகின்றனர். இதன் விளைவாக, அவர்கள் கடுமையான உடல்நலச் சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள், மேலும் இது நமது பாரம்பரிய சுதேச மருத்துவத்திற்கு கெட்ட பெயரைக் கொண்டுவருகிறது.
 
மூலிகைத் தோட்டம் மற்றும் மருத்துவம் தயாரித்தல் ஆகிய துறைகளில் இவர்களிடம் உள்ள பயிற்சி மற்றும் அறிவு மற்றும் இவற்றோடு சம்பந்தப்பட்ட திறன்கள் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை. மற்றும் நாட்டில் பயன்படுத்தப்படும் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளுக்கு இத்துறையை மேம்படுத்துவதன் மூலம் தீர்வு காண முடியும்.
 
இந்த பட்டதாரிகளில் ஒரு சிறிய சதவீதத்தினர் மட்டுமே அரசாங்கத்தால் நியமனம் பெறுகின்றனர். யாராவது பணியில் இருந்து ஓய்வு பெற்றால் மட்டுமே மற்றவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்றால், இவர்களில் பெரும்பாலோர் எப்போதும் இந்தத் துறையில் வேலையில்லாமல் இருப்பார்கள்.
 
இந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் 50க்கும் மேற்பட்ட சித்த பட்டதாரிகள் கடந்த பல வருடங்களாக நிரந்தர வேலை கிடைக்காமல் உள்ளார்கள்.
 
குறிப்பிட்ட மருத்துவத் துறையில் பல ஆண்டுகளாகப் பயிற்சி பெற்றுள்ளதால், வாழ்வாதாரத்திற்கு வேறு தொழில்களைத் தேர்வு செய்ய முடியாத துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையில் உள்ளார்கள். இவர்களது அவல நிலையைக் கருத்தில் கொண்டு, சுதேச சித்த மருத்துவத் துறையில் பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
 
புதிய கார்டர்களை உருவாக்குவதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி இவர்களை உள்வாங்க வேண்டும்.
மருத்துவமனைகளில் தற்போது உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புதல் மூலம் இவர்களுக்கான பிரச்சனைகளுக்கான தீர்வினை பெற முடியும்.
 
இவர்களில் பெரும்பாலோர் ஏற்கனவே 30 வயதைத் தாண்டிவிட்டனர், மேலும் ஒரு தொழில்முறை நிரந்தர வேலையைப் பெறுவதில் ஏற்படும் தாமதம் ஓய்வூதியப் பலன்கள், பதவி உயர்வுகள், சிறப்புப் பயிற்சிகள், அரசு வழங்கும் முதுகலை படிப்புகள் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும். இவர்களது வாழ்க்கை கேள்விக் குறியாகின்றது.
 
 

Related posts