‘சுமந்திரன் சத்தியம் செய்ய வேண்டும்’

தன்னை உண்மையிலேயே கொல்ல வந்தார்களென சுமந்திரன் சத்தியம் செய்ய வேண்டும் என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில்  நடைபெற்ற ஊடகவியிலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

சமாதானத்தையும் நல்லெண்ணத்தையும் ஏற்படுத்த வேண்டுமென்பதற்காகவே பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டதாக முன்னர் கூறப்பட்டதெனத் தெரிவித்த அவர், ஆனால் இன்றைக்கு சமாதானமும் நல்லெண்ணமும் கொண்டு வரப்பட்டுள்ளதாக தம்பட்டம் அடிக்கப்படுகின்ற நிலையில் இனியும் அந்தச் சட்டம் தேவையற்றதெனவும் ஆகவே, அந்தச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஜனாதிபதியே தன்னைக் கொலை செய்ய வந்தவர்களை மன்னிப்பளித்து விடுதலை செய்திருக்கின்றாரெனத் தெரிவித்த அவர், ஆனால் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரை கொல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படாத போதிலும், அவரைக் கொல்ல வந்ததாகக் கூறி கைது செய்து தடுத்து வைத்திருக்கின்றனரெனவும் கூறினார்.

அவ்வாறு அவரை உண்மையில் கொல்ல வந்தார்களா என்று சுமந்திரன் சத்தியம் செய்ய வேண்டும். அதே நேரம் அவருக்கு உண்மையில் மனச்சாட்சி இருக்கிறதா என்றும் கேட்கின்றேன் என்றார்

மேலும் இந்த அரசாங்கத்தைத் தாங்கள் தான் கொண்டு வந்ததாக கூட்டமைப்பினர் கூறி பெருமை கொள்கின்றனர். அவ்வாறாயின் ஏன் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லை என்றும் கேள்வியெழுப்பினார்.

Related posts