சொகுசு பஸ் மோதி விபத்து; ஓட்டோ ஓட்டுநர் ஸ்தலத்தில் பலி

ஒலுவில் – பாலமுனை எல்லைப் பிரதேசத்தில் வைத்து, சொகுசு பஸ்ஸொன்றும் ஓட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டோவைச் செலுத்தி வந்த ஓட்டுநர், சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளாரென, அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பஸ்ஸும் தம்பிலுவிலிருந்து மாளிகைக்காடு பிரதேசத்தை நோக்கிப் பயணித்த ஓட்டோவுமே, இன்று (07) அதிகாலை 5 மணியளவில் இவ்வாறு மோதியுள்ளன.

இவ்விபத்தில் தம்பிலுவில் இரண்டாம் பிரிவைச் சேர்ந்த இராஜலிங்கம் கவீந்திரன் என்னும் 37 வயதுடைய குடும்பஸ்தரரே உயிரிழந்துள்ளார்.

இவர், மீன் வியாபாரம் நிமித்தம் மீன்களைக் கொள்வனவு செய்வதற்காக, தனது இல்லத்திலிருந்து அதிகாலை 4.30 மணியளவில் மாளிகைக்காடு நோக்கிப் புறப்பட்டாரென, உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தின்போது, வயற் காணிக்குள் மேற்படி வாகனங்கள் இரண்டும் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன எனவும் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பஸ், பிரதான வீதியிலிருந்து சுமார் 100 மீற்றருக்கும் அதிகமான தூரத்துக்கு ஓட்டோவை இழுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ்ஸில் பயணித்தோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

சடலம், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை, அக்கரைப்பற்றுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts