ஜனாதிபதி தொடர்ந்தும் எங்களை ஏமாற்றுகிறார்- வேலையற்ற பட்டதாரிகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் தங்களை ஏமாற்றி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வேலையற்ற பட்டதாரிகளின் தொழிலுரிமை போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவர ஜனாதிபதி நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கே.சிவகாந்தன் வலியுறுத்தியுள்ளார்.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்குமாறு கோரிக்கை விடுக்கும் வகையிலான மகஜர் ஒன்று நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டக்களப்புக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபாலசேனவிடம் கையளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ஊடகங்ளுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் உள்வாரி, வெளிவாரியென்று இல்லாமல் பட்டப்படிப்பினை நிறைவுசெய்த அனைவருக்கும் நியமனங்களை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை முன்வைத்தார்.

1800க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எந்தவித நியமனங்களும் வழங்கப்படாமல் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியை கடந்த வருடத்தில் இருந்து நான்கு தடவைகள் சந்தித்து மகஜர்களை கையளித்தபோது வேலையற்ற பட்டதாரிகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் நியமனங்கள் வழங்கப்படும் என தெரிவித்திருந்ததாகவும் அந்த வாக்குறுதிகளை வழங்கி ஒரு வருடத்திற்கு மேலாகியும் எந்த நியமனங்களும் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தங்களுக்கு வழங்கிய போலியான வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் என்றும் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக அதிகளவான வயது கூடிய பட்டதாரிகள் வேலையற்ற நிலையில் காணப்படுவதாகவும் அவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts