தமிழ் சமூகம் சரணாகதி அரசியலையையும்,எதிர்ப்பு அரசியலையையும் கைவிட்டு இராஜதந்திர அரசியலை முன்னேடுத்தால் மட்டும்தான் கிழக்கின் இருப்பை பாதுகாக்க முடியும்

 
தமிழ் சமூகம் சரணாகதி அரசியலையையும்,எதிர்ப்பு அரசியலையையும் கைவிட்டு இராஜதந்திர அரசியலை முன்னேடுத்தால் மட்டும்தான் கிழக்கின் இருப்பை பாதுகாக்க முடியும் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பழுகாமம்  கிராமத்தில்   சப்ரி கமக் வேலைத்திட்டத்தில் கொங்றீட் வீதி திங்கட்கிழமை(2) ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,

இலங்கையில் உள்ள பொதுஜன பெரமுன கட்சியானது தமிழர்களையோ அல்லது முஸ்லிம்களையோ சேர்த்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாது.மாறாக தனி சிங்கள வேட்பாளர்களுடன் மட்டும் 99 வீதமான இடங்களில் போட்டியிட்டு வெற்றியடைந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முழுமையான பாராளுமன்றத்தை அமைக்கும் என்று எனக்கு நம்பிக்கையிருக்கின்றது.இவ் அரசாங்கம் சுமார் பத்து ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருக்கும்.ஆனால் தமிழ் தலைமைகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தோ பிளண்டி தண்ணீரோ குடிக்கமாட்டார்கள்.இன்றைய களநிலவரத்தை உணர்ந்து செயற்பட்டால் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தியை முன்னெடுத்து தமிழர்களின் இருப்பை பாதுகாக்கலாம்.

இன்று ஒருநாளைக்கு 18 தமிழர்கள் இனம் மாற்றப்படுகின்றார்கள்.115 ஏக்கர்  தமிழர்களின் நிலப்பரப்பு அபகரிக்கப்பட்டுள்ளது.நிலவளம் சூரையாடப்படுகின்றது.பிளண்டி தண்ணீர் குடிக்காத அரசியல் தலைமைகளை தமிழ்மக்கள் தெரிவு செய்தால் 10 சதம்கூட அபிவிருத்தியை மட்டக்களப்புக்கோ அல்லது கிழக்கு மாகாணத்திற்கோ கொண்டுவர முடியாது.ஆனால் முஸ்லிம் அரசியல் தலைமை புத்திக்கூர்மையாக சிந்தித்தும்,தமது சமூகம் பற்றி சிந்தித்து வாக்களித்து பேரம்பேசும் அரசியல்வாதிகளை உரீவாக்குவார்கள்.இதனால் முஸ்லிம் சமூகத்தின் பிரதேசம்,சமூகம் வளம்கொலிக்கும் பிரதேசமாக மாறும்.

வடக்கிலே உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை டக்ளஸ் தேவானந்தா,அங்கஜன் இராமநாதன்,விஜயகலா மகேஸ்வரன் போன்றோர்கள் முன்னெடுக்கின்றார்கள்.அங்கு வடக்கு தமிழ்தேசிய தலைமை அவர்களை  ஏற்றுக்கொள்கின்றது.கிழக்கிலே உரிமையுடன் அபிவிருத்தியை முன்னெடுத்தால் துரோகி என்று பட்டம் சூட்டுவார்கள்.இது கிழக்கு மாகாணத்தின் சாபக்கேடாகும்.இன்று கிழக்கிலே 58.9வீதமாக இருந்த தமிழர்கள் 38.2வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளார்கள்.இன்னும் 15 வருடங்கள் சென்றால் கிழக்கில் கடைசி இனப்பரம்பல் உள்ள இனமென்றால் தமிழினமாகும்.

தமிழ்மக்களுக்கு சாத்தியப்படாத விடயங்களையும்,நடக்காத தீர்வுகளையும் கொண்டு தமிழ்சமூகத்திற்கு சாத்தியப்படுமென தமிழ்தேசிய தலைமைகள் பொய்யுரைத்து சிம்மாசனம் ஏறப்பார்கின்றார்கள்.இவ்விடயமாக தமிழ்மக்கள் விழிப்புடன் இருக்கனும்.சரணாகதி அரசியலையும்,எதிர்ப்பு அரசியலையும் தமிழ்மக்கள் கைவிட்டு இராஜதந்திர அரசியலை முன்னெடுக்கனும்.இல்லாவிட்டால் மாற்றுச்சமூகத்திடம் கையேந்தும் நிலைமை ஏற்படும்.ஏற்கனவே தமிழ்சமூகம் கிழக்கில் கையேந்தப்பட்டுள்ளது.மல்லாக்கப்படுத்து துப்பினால் எச்சித்துப்பல் நம்முடையை முகத்தில்தான் விழுகின்றது.இவ்வாறான நிலைமை ஏற்படாமல் கிழக்கின் இருப்பை கையகப்படுத்த தமிழ்மக்கள் அரசாங்கத்துடன் பேரம்பேசி இராஜதந்திர அரசியலை முன்னெடுப்போம் எனத் தெரிவித்தார்.

Related posts