தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகின்றது

கடந்த தேர்தலில் பியசேன என்றவருக்கு தமிழ் மக்கள் பாடம் புகட்டியது போல முன்னாள் முதலமைச்சர் சிவி. விக்கினேஸ்வரனுக்கு தமிழ் மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 திருக்கோவில் பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் அழைப்பின் பேரில் நேற்று செய்வாய்க்கிழமை மாலை (13) இடம்பெற்ற தற்கால அரசியல் தொடர்பாக மக்கள் சந்திப்பின் போதே மேற்படி கருத்தினை அவர் தெரிவித்து இருந்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜக்கிய தேசிய கட்சி அரசுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு இருப்பதை தவிர எதனையும் தமிழ் மக்களுக்கு செய்யவில்லை என பாரிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். இது அப்பட்டமான பொய் நாங்கள் எண்பது வீதமான காணியை விடுவித்துள்ளோம். அரசியல் கைதிகளில் ஒரு தொகுதியினரை விடுவித்துள்ளோம். தமிழ் மக்களின் அபிவிருத்திகள் புதிய அரசியல் அமைப்புக்கான பேச்சுக்கள் என பல்வேறு விடயங்களை பெற்றுக் கொடுத்திருக்கின்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த நாட்டில் முஸ்லிம் மக்களுடன் மட்டுமல்ல சிங்கள மக்களுடனும் எதிரிகளாக வாழ முடியாது. தமிழர்களுக்கு தனிநாடு கிடைத்திருந்தாலும் அயல்நாட்டுடன் சண்டையிட்டுக் கொண்டு வாழ முடியாது. நட்பு நாடாகத்தான் இருந்திருக்க வேண்டும். முஸ்லிம் தரப்பினர் நியாயம் இல்லாது நடப்பார்கள் என்றால் அவர்களையும் ஒரு நிலைக்கு கொண்டுவந்து இன ஐக்கியத்துடன் வாழ்வதற்கான ஆரோக்கியமான விடயங்களை தூரநோக்குடன் செயற்படுத்த வேண்டும் இல்லாது போனால் இணைந்த வடக்கு கிழக்கு என்ற இலக்கு இல்லாமல் போய்விடும்.

இந்நிலையில் தற்போது ஜனாதிபதி தேர்தல் ஒன்று வருகின்றது.1994ஆம் ஆண்டு முதல் எல்லா அரசியல் தலைவர்களும் நாட்டு மக்களுக்கு ஒரு வாக்குறுதியை கொடுத்து வருகின்றனர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாது ஒழிப்போம் என்று. மக்களும் அதற்காகவே வாக்களித்தும் வருகின்றார்கள். இந்த நாட்டுக்கு தேவையானது ஜனாதிபதி தேர்தல் அல்ல புதிய அரசியல் அமைப்புச் சட்டம் என சம்பந்தன் ஐயா தெரிவித்து வருகின்றார்.இதனை அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளரை சந்தித்த போது சம்பந்தன் ஐயா கூறினார்.எமது மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் மிகவும் விரக்தியில் இருக்கின்றார்கள் நாங்கள் இந்த அரசாங்கத்துடன் இவ்வளவு தூரம் பயணித்தும் புதிய அரசியல் அமைப்பு உருவாக்குவதில் ஆட்சியாளர்கள் பின் நிற்கின்றார்கள். நாங்கள் புதிய அரசியல் அமைப்பு வரைவு தொடர்பாக எண்பதுக்கு மேற்பட்ட வழிநடத்தல் கூட்டங்களில் பங்கு கொண்டு முழுமையாக செயற்பட்டு அனைத்து கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் ஒரு அதிகாரபகிர்வு தொடர்பாக தீர்வுகள் எட்டப்பட்டன. அதனை நிறைவு செய்கின்ற துணிவு ஜனாதிபதிக்குமில்லை பிரதமருக்கும் இல்லை

இதேவேளை கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்துவது தொடர்பாக எம்மீது மக்களுக்கு கோபம் இருக்கின்றன. அது நியாயமானது. மூன்று மாத காலக்கெடு அரசினால் வழங்கப்பட்டது ஒருமாதகாலக் கெடு நாம் கூறவில்லை அதனை பௌத்த குருவே தெரிவித்து இருந்தார். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருவதுடன் இன்னும் ஒருமாதத்துக்குள் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படும் என்பதுடன் இதனை நாம் முஸ்லிம் மக்களின் இணக்கப்பாட்டுடன் செய்ய வேண்டும் என்பதை விரும்புவதுடன் தூரநோக்குடன் செயற்பட்டு தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து வாழக்கூடிய நிலைமைகளையும் உறுப்படுத்த வேண்டிய கடமைப்பாடு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உண்டு.என தெரிவித்தார்.

 

Related posts