தமிழ் மக்களுக்கு எந்தவொரு வேலைத்திட்டத்தினையும் செய்யாதவர்கள் இன்று எமது அரசாங்கத்தின் அபிவிருத்தியையும்,வேலைத்திட்டத்தையும் கேவலமாக விமர்சிப்பது நகைப்புக்குரியதாக இருக்கின்றது

பாடசாலைகள் மாணவர்கள் போன்று கையை உயர்த்தி கடந்த நல்லாட்சி ஆட்சிக்காலத்தில் அரசாங்கத்தினை பாதுகாத்தவர்களினால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு வேலைத்திட்டத்தினையும் செய்யாதவர்கள் இன்று எமது அரசாங்கத்தின் அபிவிருத்தியையும்,வேலைத்திட்டத்தையும் கேவலமாக விமர்சிப்பது நகைப்புக்குரியதாக இருக்கின்றது என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்படவுள்ள வீட்டின் பயனாளிகளுக்கான  முதலாம் கட்ட காசோலைகள் வழங்கும் நிகழ்வு பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (14)காலை பிரதேச செயலாளர் திருமதி.தி.தட்சணகௌரி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் ,மற்றும் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் கே.ஜெகநாதன்,தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் தொழிநுட்ப உத்தியோகஸ்தர்கள்,பிரதேச செயலக கணக்காளர்,உதவி திட்டமிடல் பணிப்பாளர்,பிரதேச சபை உறுப்பினர்,தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள்,பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் காசோலை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

இதன்போது தெரிவு செய்யப்பட்ட 13 பயனாளிகளுக்கு தலா ஒரு இலட்சம் பெறுமதியான காசோலைகள் இராஜாங்க அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்…

எமது மாவட்டத்தில் எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு எங்களால் முடிந்த வேலைத்திட்டங்களை நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம்.மட்டக்களப்பில் புதிய வகையான அரசியல் செயற்பாடு உள்ளது.நான்கு பேருக்கு நல்லது செய்து பிரபலியமாவது கஸ்டம்.யாராவது மக்கள் மத்தியில் அரசியல் செல்வாக்குடன் இருந்தால் அவர்கள் தொடர்பில் போலியாக விமர்சிப்பது,பொய்யாக தகவல்களை பரிமாற்றுவது.இதுதான் சிலருக்கு பிழைப்பாக உள்ளது.நாங்கள் தினமும் மக்கள் பிரச்சினை தொடர்பிலேயே கவனம் செலுத்தி சிந்திக்கின்றோம்.அரசியல் கைதிகளை எவ்வாறு விடுவிக்கலாம்,காணிகளை எவ்வாறு விடுவிக்கலாம் என்ற விடயங்களையே நாங்கள் சிந்திக்கின்றோம்.

இவர்களினால் தமிழ் மக்களுக்கு உரிமையினையும் பெற்றுக்கொடுக்கமுடியாது,தீர்வினையும் பெற்றுக்கொடுக்கமுடியாது, அபிவிருத்தியையும் பெற்றுக்கொடுக்கமுடியாது.
இவர்கள் காலையில் எழுந்தவுடன் வியாழேந்திரன் என்னசெய்கின்றார்,ஆளும்கட்சியை சார்ந்தவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று ஆராய்வதே இவர்களின் புழைப்பாக இருக்கின்றது.

பாடசாலைகள் மாணவர்கள் போன்று கையை உயர்த்தி கடந்த நல்லாட்சி ஆட்சிக்காலத்தில் அரசாங்கத்தினை பாதுகாத்தவர்களினால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு வேலைத்திட்டத்தினையும் செய்யாதவர்கள் இன்று எமது அரசாங்கத்தின் அபிவிருத்தியையும்,வேலைத்திட்டத்தையும் கேவலமாக விமர்சிப்பது நகைப்புக்குரியதாக இருக்கின்றது எனத்தெரிவித்தார்.

Related posts