திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் தாமரைக்கேணி குளக்கட்டு விரைவில் திருத்தப்பட வேண்டும். – முன்னாள் பா.உ. சந்திரநேரு சந்திரகாந்தன்

அம்பாரை மாவட்டத்தின், திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் தாமரைக்கேணி குளத்தின் குளக்கட்டு உடைந்துள்ளபோதும் , இன்று வரை இது குறித்து எந்த அரச அதிகாரிகளோ நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் விசனம் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

கடந்த 2018ம் வருடம் மார்கழி மாதம் அளவில் அமைக்கப்பட்ட தாமரைக்கேணி குளத்தின் குளக்கட்டு சில மாதங்களிலேயே உடைந்து போனது. ஆனால் இன்று வரை இது குறித்து எந்த அரச அதிகாரிகளோ நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. 

கடந்த டிசம்பர் மாதமளவில் சேதமடைந்த அணைக்கட்டு காராணமாக இக்குளத்தின் நீர் சேமிப்பு வீதம் கால் வாசியாக குறைந்துள்ளது. இதனால் இம்முறை இடைப்போக வேளான்மை செய்கை பல நூறு ஏக்கர் முற்று முழுதாக கைவிடப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அது மட்டுமல்லாது அக்குளத்தில் மீன்பிடித்து வாழ்வை நடாத்திச் சென்ற பல மீனவர்கள் இவ்வருடம் கூலித்தொழிலுக்காகச் செல்வதுடன்,  இக்குளத்தில் நீர் இல்லாததால் நூற்றுக்கணக்கான கால்நடைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. அது மட்டுமல்லாது, அவ் வட்டாரத்தில் கோடை காலத்தில் சேனைப்பயிர் செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளும் அவர்களின் தற்காலிக கிணறுகளில் நீர் வற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆகவே பொதுமக்களின் நன்மை கருதி இம் மாரி காலத்திற்கு முன்னர், உடைந்த இந்த தாமரைக்கேணி குளக் கட்டை திருத்தி நீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

Related posts