தும்பங்கேணியில் நிலக்கடலை  விழிப்புணர்வு நிகழ்வு

ஊடுபயிர்ச் செய்கை மூலம் நிலக்கடலை விதை உற்பத்தி தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு திக்கோடை விவசாய போதனாசிரியர் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி இளைஞர் விவசாய திட்டப்பிரதேசத்தில் நடைபெற்றது. 
 
திக்கோடை விவசாய போதனாசிரியர் எஸ்.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன் உதவி விவசாய பணிப்பாளர்களான எஸ்.சித்திரவேல் திருமதி.நித்தியா நவரூபன் தெற்கு வலய விவசாய போதனாசிரியர்கள் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் போரதீவுப்பற்று அக்றோ பரடைஸ் கம்பனியின் தவிசாளர் ஆலய பரிபாலன சபையினர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் பிரதேச விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 
 
மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஊடுபயிர்ச்செய்கைக்கான விதைகள் வழங்குவது தொடர்பாகவும் தற்போதைய விவசாய திட்டங்கள் தொடர்பிலும் தெளிவான விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வாழைச்செய்கையில் ஊடுபயிராக செய்கை பண்ணப்பட்ட நிலக்கடலையின் அறுவடை நிகழ்வும் நடைபெற்றது.
 
இதன்போது விவசாயிகள் குறைகள் மற்றும் தேவைகள் கேட்டறியப்பட்டதுடன் அவற்றுக்கான தீர்வுகள் விரைவாக பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் பிரதி விவசாய பணிப்பாளர்  உறுதியளித்தார்.
 
 

Related posts