நாடு திரும்புமாறு இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு பிரதமர் அழைப்பு

இந்தியாவில் உள்ள ஏனைய இலங்கை அகதிகளையும் நாடு திரும்புமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க  பாராளுமன்றத்தில் அழைப்பு விடுத்தார்.

பிரதமர் தெரிவித்ததாவது

தமிழக அகதி முகாம்களிலுள்ள 3815 பேர் நாட்டிற்குத் திரும்பி வர இணக்கம் தெரிவித்துள்ளதாக இந்திய அரசாங்கம் எமக்கு அறிவித்துள்ளது. அவர்களின் பொருட்களுடன் அகதிகள் நாட்டிற்கு அழைத்துவரப்பட வேண்டியுள்ளது. அதற்காக கடல் மார்க்கமாக போக்குவரத்து செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கான கடல்சார் வசதிகளை ஏற்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அகதிகளை நாட்டிற்கு வரவழைப்பதற்கான துரித செயற்பாடுகளை முன்னெடுக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. யுத்தத்தினால் நாட்டிலிருந்து வௌியேறிய அனைவரையும் நாட்டிற்கு மீண்டும் வருமாறு நான் இந்த சந்தர்ப்பத்தில் அழைப்பு விடுக்கின்றேன். மீள்குடியேற்றப்படும் மக்களுக்கான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கு எமது அரசாங்கம் முன்னுரிமை வழங்கி செயற்படும் என்பதையும் கூறிக்கொள்கின்றேன்.

யுத்தம் காரணமாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து சென்றதுடன் தமிழகத்திலுள்ள அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்தனர்.

இவ்வாறு நாட்டைவிட்டு வெளியேறிய மக்களுள் பலர் தற்போது நாடு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் (07) தமிழகத்தில் இருந்து 27 அகதிகள் நாடு திரும்பியுள்ளனர்.

Related posts