நோயாளர்களுக்கு  கொழும்பில் இலவச சத்திர சிகிச்சை வழங்க ஏற்பாடு

யாழ். மாவட்டத்தை சேர்ந்த கட்ராக் நோயாளர்களுக்கு இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் இலவச சத்திர சிகிச்சை மேற்கொண்டு கொடுக்கப்பட உள்ளது.

கட்ராக் சத்திர சிகிச்சையை யாழ். போதனா வைத்தியசாலையில் பெறுவதற்கு  நோயாளி ஒருவர் சாதாரணமாக சுமார் மூன்று மாதங்கள் வரையில் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. இதை கருத்தில் கொண்டே இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் எண்ண கருவுக்கு அமைய கட்ராக் நோயாளர்களுக்கு கொழும்பில் இலவச சத்திர சிகிச்சை மேற்கொண்டு கொடுக்கின்ற வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.
யாழ்ப்பாண கட்டளை தலைமையகத்தின் வேண்டுகோளை ஏற்று தென்னிலங்கையையும், இந்தியாவையும் சேர்ந்த வைத்திய நிபுணர்கள் சத்திர சிகிச்சையை மேற்கொள்ள முன்வந்து உள்ளனர். அதே போல இத்திட்டத்துக்கான நிதி பங்களிப்புகளை புலம்பெயர் நாடுகளையும், தென்னிலங்கையையும் சேர்ந்த மனித நேய செயற்பாட்டாளர்கள் வழங்குகின்றனர்.
பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு, கட்டம் கட்டமாக கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டு, சிகிச்சை வழங்கப்பட்டு, சுகம் அடைந்த பின்னர் மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட உள்ளனர். சத்திர சிகிச்சைக்கான தகைமை காண் பரிசோதனைகளை யாழ்ப்பாணத்தில் வருகின்ற வாரங்களில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
இத்திட்டம் மூலம் பயன் அடைய விரும்புகின்ற நோயாளர்கள்  0702095920 என்கிற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு முன்பதிவுகளை மேற்கொள்ளுமாறு கோரப்படுகின்றனர்.

Related posts