பசளை உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகளுக்கு உதவகல்முனை மாநகர சபை தீர்மானம்

உரக்கட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு சேதனப் பசளை உற்பத்தியை அதிகரித்து, விவசாயத்துறைக்கு பங்களிப்பு செய்வதற்கான விசேட திட்டத்தை நடைமுறைப்படுத்துவதென கல்முனை மாநகர சபை தீர்மானித்துள்ளது.
 
கல்முனை மாநகர சபையின் 48ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு புதன்கிழமை (23) பிற்பகல் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றபோதே இவ்விடயம் குறித்து ஆராயப்பட்டு, இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
இவ்விடயத்தை முன்மொழிந்து கருத்து தெரிவித்த மாநகர சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் சி.எம்.முபீத் அவர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உரக்கட்டுப்பாட்டு திட்டத்தினால் விவசாயத்துறை நாசமாகிப் போயுள்ளது என்று விசனம் தெரிவித்தார்.
 
இதனால் 40 ஆயிரம் ரூபாவுக்கு கூட உரத்தைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுவதால், எமது மாநகர சபையினால் சேகரிக்கப்படுகின்ற உக்கக்கூடிய கழிவுகளைக் கொண்டு, பசளைகளை உறபத்தி செய்து, விவசாயிகளுக்கு நல்ல விலையில் அவற்றை விற்று, உதவ வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
 
இதனை ஆமோதித்து கருத்து வெளியிட்ட சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர் அப்துல் அஸீஸ் அவர்கள், உரத்தட்டுப்பாடு நிலவி வருகின்ற இன்றைய சூழ்நிலையில் இயற்கை சேதனப் பசளைக்கு நல்ல கிராக்கி இருப்பதாகவும் அவற்றை மிகையாக உற்பத்தி செய்து எமது பகுதியிலேயே சந்தைக்கு விடுவோமாயின், விவசாயிகள் தாமே முன்வந்து, கொள்வனவு செய்வார்கள் எனவும் தெரிவித்தார்.
 
இதற்குப் பதிலளித்த மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்கள், எமது மாநகர சபைக்கு சொந்தமான பசளை உற்பத்தி நிலையத்தில் உக்கக்கூடிய கழிவுகளைக் கொண்டு, முடியுமானளவு பசளை உற்பத்தி செய்யப்பட்டு, வருகின்றது. அங்கு ஆளணி மற்றும் இயந்திர வசதிகளை மேம்படுத்தும்போது உற்பத்தியை இன்னும் அதிகரிக்க முடியுமாக இருக்கும். அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.
 
இதனைத் தொடர்ந்து மேற்படி தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன் பிரகாரம் பசளை உற்பத்தியை அதிகரித்து, சந்தைப்படுத்துவதற்கான திட்டத்தை தயாரித்து, அதனை அமுல்படுத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு மாநகர சபையின் சுகாதார நிலையியற் குழுவின் தவிசாளர் சட்டத்தரணி ரொஷான் அக்தர் அவர்களை முதல்வர் கேட்டுக் கொண்டார்.
 
இந்த அமர்வில் மற்றும் பல விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் தேசிய காங்கிரஸ் சார்பான புதிய உறுப்பினர் ஏ.எஸ்.ஹமீட் அவர்கள் முதன்முறையாக சபைக்கு வருகைதந்து, கன்னியுரை நிகழ்த்தினார்.

Related posts