புலிகளிளை தோற்கடித்த போதிலும் அவர்களின் கொள்கையினை முழுமையாக தோல்வியுறச் செய்வதற்கு இன்னும் முடியாது

கடந்த 2009ஆம் ஆண்டு பயங்கரவாதிகளை தோற்கடித்திருந்தாலும் கூட, அவர்களின் கொள்கையை முழுமையாக முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற, சிறப்பு கூட்டத்தொடரில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை நிகழ்த்திய ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார். குறித்த பிரகடன உரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“நாட்டின் நிலையான அடித்தளம் தேசிய நல்லிணக்கமே ஆகும். உண்மையான தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்மானங்களை இயற்றத்தக்க கட்டமைப்பினை அறிமுகப்படுத்த வேண்டும்.
அந்த நோக்கை வெற்றிகொள்வதற்கு தற்போது செயலில் இருந்துவரும் மாகாண சபை முறைமையை மேலும் பலப்படுத்துவது காலத்தின் தேவையாகும் என நம்புகிறேன்.
எவ்வாறான விமர்சனங்கள் எழுந்த போதிலும் வடக்கு கிழக்கு மக்களின்  மனங்களை வெல்லவேண்டுமாயின் மக்களின் விருப்பத்தையும் இணக்கப்பாட்டையும் பெற்ற அரசியல் வேலைத்திட்டமொன்றினை ஆரம்பித்தல் வேண்டும்.
பௌதீக ரீதியில் நாம் பயங்கரவாதிகளை தோற்கடித்த போதிலும் அவர்களின் கொள்கையினை முழுமையாக தோல்வியுறச் செய்வதற்கு இன்னும் முடியாது போயிருக்கின்றது.
கடந்த மூன்றரை வருடங்களாக சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பை பெற்று அந்தக் கொள்கையினை தோல்வியுறச் செய்வதற்கே நான் முயற்சித்து வந்தேன். யுத்தத்தின் பின்னரான நிலைமைகளை கையாள்வது என்பது மிகுந்த சவாலாகும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்ற சமயம் அச்சவாலுக்கான விடைதேடும் காரியம் ஏழு வருடங்களால் தாமதமாகி இருந்ததனால் அவை மேலும் இக்கட்டான சூழ்நிலைக்கு உள்ளாகியிருந்தது.
மூன்று தசாப்தங்களாக சமூகத்தில் வேரூன்றியிருந்த போர் மனநிலையினை அகற்றி சகவாழ்வினை ஏற்படுத்துவதற்கு இன்னும் எம்மால் பாரிய வேலைகளை செய்ய வேண்டி இருக்கின்றது.
ஒரு அரசாங்கத்தினால் மாத்திரம் அதனை செய்வது கடினமாகும். அதற்கு சமூகத்தின் அனைத்து தரப்புகளினதும் நேரடிப் பங்களிப்பு கட்டாயமாகத் தேவைப்படுகின்றது. அதனால் அந்த நோக்கை அடைவதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவோமென அனைத்து தரப்புகளுக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.
தேசிய பாதுகாப்பு மீதான எமது கவனமும் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றது. எமது பூமியின் பாதுகாப்பில் மனிதர்களின் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு ஆகியன இங்கு முக்கிய துறைகளாக அமைகின்றன. குறிப்பாக இந்து சமுத்திரத்தின் கேந்திர ஸ்தானத்தில் இலங்கை அமைந்திருப்பதால் எமக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கப் பெற்றிருக்கின்றது.
அதேபோல் நாம் எதிர்கால நோக்குடன் மிக நுட்பமாக கவனத்தில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு துறை சவால்களும் இருக்கவே செய்கின்றன என்பதை நாம் எமது கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஆதலால் சர்வதேச உறவுகளை பேணுவதில் நடுநிலையான, நட்பு ரீதியிலான கொள்கையின் முக்கியத்துவத்தை இங்கு வலியுறுத்த விரும்புகிறேன். எமது நட்பு ரீதியிலான வெளிநாட்டுக் கொள்கையே எமக்கு மிகுந்த பலனைப் பெற்றுத் தந்திருக்கின்றது.
உலகில் அனைத்து நாடுகளைப் போன்றே ஐக்கிய நாடுகள் சபை முதலான சர்வதேச அமைப்புகளுடன் நாம் மிகுந்த நட்பையும் தோழமையையும் உருவாக்கிக்கொள்வதற்கு வேறொரு சந்தர்ப்பம் இல்லை என்றே கூறலாம்” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Related posts