பெண் அரச ஊழியர் திருமதி தவப்பிரியா சுபராஜ்மீது தாக்குதல்-முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கருணா கோரிக்கை

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை கமநல சேவைகள் திணைக்களத்தில் பணிபுரியும்  பெண் உத்தியோகத்தர்   தாக்கப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை கமநல சேவை திணைக்களத்தில் பணிபுரியும்  பெண் அரச உத்தியோகத்தரை  அதே திணைக்களத்தில் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றும் நபர் புதிய வருடத்தில்  அரச உத்தியோகத்தர்கள் கடமை பொறுப்பேற்கும் நிகழ்வின்போது  தாக்கியுள்ளார்.

இவ்வாறு தாக்கப்பட்டு காயமடைந்த குறித்த பெண் உத்தியோகத்தர் தற்போது 3 நாட்களாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது தொடர்பில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் வெள்ளிக்கிழமை(3) இரவு  சம்பவத்தை அறிந்து குறித்த பெண் அரச ஊழியர் சிகிச்சை பெற்று வரும் வைத்தியசாலைக்கு சென்று நலன் விசாரித்ததுடன் இவ்வாறான தாக்குதல் முயற்சி அநாகரீகமானது எனவும் இவ்வாறான நிலைமை தொடருமானால் இனங்களுக்கிடையே தேவையற்ற பிரச்சினைகள் உருவாக கூடும்.எனவே சம்பந்தப்பட்ட நபர் சட்டநடவடிக்கைக்கு உடனடியாக உட்படுத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.அத்துடன்  குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை  கேட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

குறித்த பெண் அரச உத்தியோகத்தரை தாக்கிய நபர் தற்போது தலைமறைவாகி உள்ளார் எனவும் சம்பவம் தொடர்பில் அம்பாறை உதவி பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளதாகவும்  சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

எனினும் தாக்குதலுக்கு உள்ளாகி  சிகிச்சை பெற்று வரும் பெண்  இதுவரையில் உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லையெனவும் தனக்கு ஒரு நியாயமான தீர்வு ஒன்றினை பெற்றுத்தருமாறு   ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய காரியாலயத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts