மக்களின் பிரச்சினையை எடுத்துக்கூறும்போது விடுதலைப் புலிகள் என முத்திரை குத்துகிறார்கள்: விஜயகலா மகேஸ்வரன்

மக்களுக்குள்ள பிரச்சினையை எடுத்துக்கூற முயலும்போது தமிழீழ விடுதலைப் புலிகளாக முத்திரை குத்தப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டார்.

மக்களின் அடிப்படைப் பிரச்சினையை வௌிச்சத்திற்குக் கொண்டு வருவதற்காகவே மக்கள் தன்னை பாராளுமன்றம் அனுப்பியதாகவும் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

தன்னுடைய துணிச்சல் குறைந்தால் மக்களின் துணிச்சல் குறைந்துவிடும் என்பதால், தான் பயப்படப்போவதில்லை எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, பாராளுமன்றத்தை குண்டு போட்டு அழிப்பேன் என்று தெரிவித்தவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் விஜயகலா மகேஸ்வரன் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது எனவும் வட மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற மரக்கன்று வழங்கும் நிகழ்விலேயே இந்த விடயங்கள் கூறப்பட்டன.

குறித்த நிகழ்வு சமூக நலன்புரி மற்றும் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயா கமகேவின் தலைமையில் இடம்பெற்றது.

Related posts