மட்டக்களப்பிற்கு உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்ட சீனத் தூதுவருக்கும் சிவில் சமூகத்தினருக்கும் இடையில் விசேட சந்திப்பு!!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் Qi zhenhong இற்கும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று (25) திகதி இரவு மட்டக்களப்பு பாசிக்குடாவில் உள்ள சுற்றுலா விடுதியில் இடம்பெற்றுள்ளது.
 
மட்டடக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல்வேறுபட்ட விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமாங்கராஜா தலைமையில் தூதுவரை சந்தித்த குழுவினர் மாவட்டத்தின் முக்கிய உற்பத்தித் துறைகளான மீன்பிடி, விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுற்றுலாத்துறை உள்ளிட்ட அனைத்து துறைசார் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பிலான திட்டங்களையும் சீனத் தூதுவரிடம் முன்வைத்துள்ளனர்.
 
இதில் நீண்டகால மற்றும் குறுகிய கால திட்டங்கள் என பல அடங்குவதுடன், கல்வித்துறை, மருத்துவதுறை, தொழிற்துறை, தொழிற்பயிற்சி வழங்குதல், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரம் அபிவிருத்தி, யுத்தத்தால் பாதிக்கப்பட்டு விசேட தேவையுடைய குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடுகள் தொடர்பான மேலும் பல விடயங்கள் தொடர்பாகவும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமாங்கராஜா தெரிவித்திருந்தார்.
 
இதன்போது சிவில் சமூகத்தினர் சீன தூதுவரை கௌரவிக்கும் முகமாக பொன்னாடை போர்த்தி, மலர்மாலை அணிவித்து, நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவித்திருந்தனர்.
 
குறித்த கலந்துரையாடலில் சீன தூதரக அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட மேலும் பலர் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்

Related posts