மட்டக்களப்பில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குநோய் பரவல் சடுதியாக அதிகரித்து வந்த நிலையில் கடந்த மே 13ஆம் திகதி தொடக்கம் மே 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 41 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.
 
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 நோயாளர்களும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 நோயாளர்களும், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 நோயாளர்களும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 நோயாளர்களும்,  வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 நோயாளர்களும், செங்கலடி மற்றும் களுவாஞ்சிகுடி ஆகிய
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஒரு நோயாளர்கள் வீதமும், மொத்தமாக 41 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
அதேவேளை கத்தான்குடி, கிரான், பட்டிப்பளை, ஆரையம்பதி, வவுனதீவு, வாகரை, வெல்லாவெளி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ் வருடத்தில் இதுவரை 463 பேர் டெங்குநோய்த் தாக்கத்திற்குட்பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவே அதிக டெங்கு நோயாளர்களை இனங்கண்ட  பிரிவாக இனங் காணப்பட்டுள்ளதாகவும், 2 மரணங்கள் சம்பவித்தித்திருப்பதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் மாவட்ட ஊடகப் பிரிவிற்கு தகவல் தெரிவித்திருந்தார்.
 
இதேவேளை பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கிக்கிடக்கின்ற குப்பைகள் நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்குநுளம்புகள் பரவுவதற்கு இடம் கொடுக்காதவகையில் சூழலை துப்பரவாக வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Related posts