மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.இருவர் படுகாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடத்தில் இன்று புதன்கிழமை(12) மாலை 3.30 மணியளவில்  இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இரு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று மாலை பெரியகல்லாறிலிருந்து மட்டக்களப்புக்கு வந்துகொண்டிருந்த முச்சக்கர வண்டியை கல்முனையிலிருந்து மட்டக்களப்புக்கு வந்துகொண்டிருந்த தனியார் பஸ் மோதி தள்ளியுள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டியின் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் அதில் பயணம் செய்த இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

பொதுமக்களின் உதவியுடன் படுகாயமடைந்தவர்கள் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு ஏற்றி அனுப்பப்பட்டு  அனுமதிக்கப்பட்டதுடன் ஒருவர் மேலதிக சிசிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விபத்தில் பெரியகல்லாறு பிரதான வீதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான முச்சக்கர வண்டி சாரதியான அழகப்பர் மணிராஜ்(49வயது) என்பவர் உயிரிழந்ததுடன் அவரது சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இவ்விபத்தில் குகதாஸ் இராசாத்தி (வயது-47),மற்றும் 16 வயதுடைய யுவதியும் படுகாயமடைந்துள்ளனர்.

தனியார் பஸ்சின் சாரதி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

Related posts