மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக 329 வாகனங்கள் போக்குவரத்து பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன

நடைபெறவிருக்கும் 2020 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் கடமைகளுக்காக 329 வாகனங்கள் போக்குவரத்துக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இத்தேர்தல் நடவடிக்கைக்காக 428 வாக்குச் சாவடிகள், 74 வலயங்கள் மற்றும் தேர்தல்கடமைகளில் ஈடுபட்டுள்ள விசேட பிரிவுகளுக்குமாக இந்த 329 வாகனங்களும் பயன்படுத்தப்படவுள்ளன. இதற்காக இம்மாவட்டத்திலுள்ள அரச திணைக்கள பிக்கப் வாகனங்கள் 149, இலங்கை போக்கு வரத்து சபைக்குரிய பஸ் வண்டிகள் 50, தனியார் மினி பஸ்கள் 30, சிறியரக தனியார் வேன்கள் 30 உட்பட கொழும்பிலிருந்து ஏனைய திணைக்கள பிக்கப், ஜீப் போன்ற வாகனங்கள் 70 உள்ளடங்களாக மொத்தம் 329 வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா அரசாங்க தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப் பிரிவிற்கு தகவல் தெரிவித்தார். 
 
இதேவேளை பாராளுமன்ற பொதுத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆந்திகதி நடைபெறவுள்ளதுடன் வாக்கெண்ணும் பணிகள் தேர்தலுக்கு மறுதிணமாகிய ஆகஸ்ட் 6 ஆந்திகதி மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மற்றும் மகாஜனக் கல்லூரிகளில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts