மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் கனிசமாக அதிகரித்து வருகின்றது. கடந்த ஒக்டோபர் 10 ஆந் திகதி தொடக்கம்; 16 ஆந் திகதி வரையும் 39 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.
 
இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 21 நோயாளர்களும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 நோயாளர்களும், கோரளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 நோயாளர்களும், வாழைச்சேனை, செங்கலடி, மட்டக்களப்பு, காத்தான்குடி மற்றும் பட்டிப்பளை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 01 டெங்கு நோயாளர்களுமாக மொத்தம் 39 பேர் மாவட்டத்தில் இனங் காணப்பட்;டுள்ளனர்.   
 
இருப்பினும் வாகரை, ஏறாவூர், வவுனதீவு, வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி மற்றும் கிரான் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.
 
மேலும் கடந்த 09 மாதங்களில் இம்மாவட்டத்தில் 2 ஆயிரத்தி 309 போர் டெங்கு நோய்த் தாக்கத்திற்குட்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
இதேவேளை எதிர்வரும் மழைகாலத்தில் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள் நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு இடம் கொடுக்காத வகையில் சூழலை துப்பரவாக வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Related posts