மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு பகுதிகளில் புதிய இயந்திர படகு சேவையினை வழங்குவதற்காக 40மில்லியன் ரூபா நிதி

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு பகுதிகளில் புதிய இயந்திர படகு சேவையினை வழங்குவதற்காக 40மில்லியன் ரூபா நிதியை அரசாங்கம் ஒதுக்கீடுசெய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரையினையும் எழுவான் கரையினையும் இணைக்கும் வகையில் அம்பிளாந்துறை – குருக்கள்மடம், மண்டூர் – குருமண்வெளி படகு சேவைகள் நீண்டகாலமாக நடைபெற்றுவருகின்றது.

குறித்த பகுதியில் பயன்படுத்தப்படும் இயந்திரகு படகுகள் நீண்டகாலமாக பழுதடைந்த நிலையில் காணப்படுவதன் காரணமாக அதனை திருத்தியமைக்க உதவுமாறு நீண்டகாலமாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டுவந்துள்ள நிலையில் இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதை தொடர்ந்து அதற்கான நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அம்பிளாந்துறை துறை பகுதிக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் அங்கு முன்னெடுக்கப்படும் படகு சேவையினை பார்வையிட்டதுடன் குறித்த பகுதியின் நிலைமைகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.

வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் றிஸ்வி மற்றும் மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் என்.புஸ்பலிங்கம் உட்பட பலர் இணைந்திருந்தனர்.

இதன்போது குறித்த இறங்கு துறைப்பகுதியை புனரமைப்பதற்கான நடவடிக்கையினையும் மேற்கொள்ளுமாறு வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு பணிப்புரைகளை விடுத்துள்ளார்.

நவீன வகையிலான இயந்திரப்படகு இரண்டை கொள்வனவு செய்தவதற்கு அரசாங்கம் 40மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடுசெய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் இதன்போது தெரிவித்துள்ளார்.

Related posts