மனித உணர்வுகள் மதிக்கப்படவேண்டியவை!பதில் அரசாங்க அதிபர் ஜெகதீசன் கூறுகிறார்.

மனித உணர்வுகளுக்கு அனைத்து மதங்களும் மதிப்பளிக்கின்றன. வௌ;வேறு பெயர்கொண்டு மதங்களை பின்பற்றினாலும்  வணக்கமுறைகள் வேறுபட்டாலும் மனித உணர்வுகள் ஒன்றே. அவை மதிக்கப்படவேண்டும்.
 
இவ்வாறு அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் தெரிவித்தார்.
 
மனித அபிவிருத்தித்தாபனத்தின் ஏற்பாட்டில் ‘மொழி உரிமையை அடைந்துகொள்ளல் மற்றும் சமுக ஒருமைப்பாட்டுச் செயற்றிட்டத்தின்கீழ்’ சகவாழ்வுக்குழுக்களை வலுப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் ஓரங்கமாக தெரிவுசெய்யப்பட்ட நான்கு குழுக்களுக்கு நிதியுதவி வழங்கும் வைபவம் காரைதீவு பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நேற்று(4)செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 
மனித அபிவிருத்தித்தாபனப் பணிப்பாளர் கலாநிதி பி.பி.சிவப்பிரகாசம் தலைமையில் காரைதீவுப்பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தாபன ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா, உதவிபிரதேசசெயலாளர் எஸ்.பார்த்தீபன், தாபனஇணைப்பாளர்களான  பி.ஸ்ரீகாந்த் ,பி.நடராஜா, உதவி இணைப்பாளர் எம்.ஜ.றியால் ,அரசசார்பற்ற நிறுவன இணைப்பாளர் இர்பான் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
 
நிகழ்வில் அரசஅதிபர் ஜெகதீசன் மேலும் உரையாற்றுகையில்:
 
கடந்தகால சம்பவங்களாலும்  மனித மனங்களில் ஆறாத வடுக்கள் காயங்கள் நிறைந்திருக்கலாம். அதனை மறக்காமல் இருப்பதால் பிரயோசனமில்லை. மனிதர் உணர்வுகளுக்கு உட்பட்டவர்கள்தான். அதற்காக அதையெண்ணி வாழ்க்கையை பாழாக்கமுடியாது.அதில் அர்த்தமுமில்லை.
 
மதங்கள் பிரிந்துவாழவேண்டும் என்று எந்தஇடத்திலும் கூறவில்லை. மூவினங்கள் வாழுகின்ற இருமொழிகள் பேசுகின்ற மனிதர்கள் வாழும் இந்த அழகிய இலங்கைத்திருநாட்டில் நாம் இணைந்து வாழவேண்டும்.அப்போதுதான் வாழ்வில் அர்த்தம் புரியும்.
 
உடம்பில் சிறுகாயம் ஏற்பட்டால் உடனே ஓடிச்சென்று மருந்துஎடுத்து சுகப்படுத்திவிடுகின்றோம். ஆனால் சில சம்பவங்களால் ஏற்பட்ட கசப்புணர்வுகளை மறப்பதில் சிரமப்படுகின்றோம். மறதியைப்போல் ஒரு மாமருந்து இல்லை என்பார்கள். எனவே கசப்பான உணர்வுகளை மறந்து புரிந்துணர்வுடன் நிம்மதியாக வாழவேண்டும்.
 
ஒருவரையொருவர் புரிந்து வாழவேண்டும். மனித அபிவிருத்தித்தாபனத்தின் பாரிய அரிய சேவைகளை நானறிவேன். ஆலாசகர் சகா இங்கு தாபனத்தின் கடந்தகால நிலையான அபிவிருத்திபணிகள் பற்றி அழகாகக்கூறினார். உண்மை.
இன்றைய காலகட்டத்தில் மொழியுரிமை சகாவாழ்வு விடயத்தில் அவர்கள் ஏற்பாட்டாளர்களான செயற்படவந்திருப்பது பாராட்டுக்குரியது. பணிப்பாளர் சிவப்பிரகாசம் ,ஆலோசகர் சகாதேவராஜா, இணைப்பாளர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட குழுவினரை பாராட்டுகிறேன் என்றார்.
 
நிகழ்வில் கல்முனை காரைதீவுப்பிரதேசத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட நான்கு சகவாழ்வுக்குழக்களுக்கு தலா 50ஆயிரம் ருபா வீதம் காசோலை வழங்கப்பட்டது.
 
 

Related posts