மயிலத்தமடு,மாதவனை பிரதேசத்தின் பிரச்சனைகளை வைத்து அரசியல் இலாபம் தேடாமல் ஒரு சுமுகமான முறையில் அவர்களுக்கான சாத்தியமான தீர்வுகளை முன்னெடுக்கும் வண்ணமான வேலைத்திட்டங்களை பக்குவமாகவும், நிதானமாகவும்,முன்னெடுத்து பிரச்சனைகளுக்கான தீர்வை நான் பெற்றுக்கொடுப்பேன்

மயிலத்தமடு,மாதவனை பிரதேசத்தின் பிரச்சனைகளை  வைத்து அரசியல் இலாபம் தேடாமல் ஒரு சுமுகமான முறையில் அவர்களுக்கான சாத்தியமான தீர்வுகளை முன்னெடுக்கும் வண்ணமான வேலைத்திட்டங்களை பக்குவமாகவும், நிதானமாகவும்,முன்னெடுத்து பிரச்சனைகளுக்கான தீர்வை நான் பெற்றுக்கொடுப்பேன் என சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பிலான களவிஜயம் ஒன்றினை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் சனிக்கிழமை(30) காலை மேற்கொண்டிருந்தார்.

அனைவருக்கும் தெரிந்திருக்கும் நீண்ட காலமாக தீர்வுகள் எட்டப்படாமல் இதுவரைக் காலமும் பேசும் பொருளாக இருந்து வந்த மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்தரை தொடர்பிலான பிரச்சினைகளுக்கான தீர்வுகளை காணவேண்டும் என்ற அடிப்படையில் பண்ணையாளர்களுக்கும், வனவளதிணைக்கள அதிகாரிகளுக்கும்,மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்குமிடையிலான சுமுகமான கலந்துரையாடல் ஒன்றினை சனிக்கிழமை(30) மேற்கொண்டிருந்ததுடன் குறித்த பண்ணையாளர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பில் சரியான விளக்கத்தினையும் அதிகாரிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் இதன்போது தெளிவுபடுத்தி இருந்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்….
அனைவருக்கும் தெரிந்திருக்கும்  நான் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் மேய்ச்சல் தரைக்கென 23,400 கெக்டேயர்  நிலப்பரப்பினை அளவீடுசெய்து அனைத்து செயற்பாடுகளையும் நிறைவுசெய்து அமைச்சரவை அனுமதிக்காக விண்ணப்பிக்கவிருத்த தருவாயில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக குறித்த விடயம் தொடர்பில் எதுவித முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படாது போயிருந்தது.

மேலும் குறித்த பகுதியிலுள்ள பண்ணையாளர்களுக்கு மேய்ச்சல் தரை தொடர்பிலான பிரச்சினைகள் மாத்திரமன்றி போக்குவரத்துக்கான சரியான பாதைகள் இன்மை தொடர்பான பிரச்சினைகளும், கால்நடைகளுக்கான சரியான குடிநீர் வசதிகள் இன்மை தொடர்பான பிரச்சினைகளும், பாலை சேகரித்து வைப்பதற்கான பால் சேகரிப்பு நிலையம் இன்மை தொடர்பான பிரச்சினைகளும்,வனவள பிரிவினருக்கும் பண்ணையாளர்களுக்குமிடையில் அடிக்கடி முரண்பாடுகள் தோற்றம் பெருகின்றமை தொடர்பிலான பிரச்சினைகளும் காணப்படுகின்றது.

இதனடிப்படையில் நான் இந்த மாவட்டத்தில் பிறந்தவன் என்ற வகையிலும் அதிகூடிய விருப்பு வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் சென்றவன் என்ற வகையிலும் இப்பிரச்சனைகளை  வைத்து அரசியல் இலாபம் தேடாமல் சுமுகமான முறையில் அவர்களுக்கான சாத்தியமான தீர்வுகளை முன்னெடுக்கும் வண்ணமான வேலைத்திட்டங்களை பக்குவமாகவும் நிதானமாகவும் முன்னெடுத்து வருகின்றேன்.

அந்த வாகையில் அப்பகுதி மக்களின் போக்குவரத்து  தேவைக்கான பாதைகளை விரைவில் அமைப்பதற்கான நடவடிக்கைகளையும், தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் மகாவலி  அபிவிருத்தி ”B” வலய வலது வாய்க்கால் திட்டத்தினுள் உள்வாங்கப்படும்  மூன்று குளங்களிலும் பண்ணையாளர்கள் தங்களது கால்நடைகளை எந்தவித தடையுமின்றி நீர் அருந்த செய்வதற்கான நடவடிக்கைகளையும், மிக விரைவில் பால் சேகரிப்பு நிலையம் ஒன்றினை குறித்த பகுதியில் அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம்.

அத்துடன் பண்ணையாளர்களுக்கும் வனவள அதிகாரிகளுக்குமிடையில் ஏற்படுகின்ற கருத்து முரண்பாடுகள் தொடர்பில் இரு தரப்பினருக்குமிடையே கலந்துரையாடல் ஒன்றினை ஏற்படுத்தி இவ்வாறான பிரச்சினைகள் இனிவரும் காலங்களில் தோற்றம் பெறாத வண்ணம் சில தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதுடன் மிக விரைவில் மேய்ச்சல் தரை தொடர்பில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கும்  அரசாங்கத்துடன் இணைந்து சரியான தீர்வினை பெற்று கொடுக்க தேவையான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம்.

குறித்த விஜயத்தின் போது காணி தொடர்பிலான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. முகுந்தன், கச்சேரி நிருவாகிகள், பிரதேசசெயலக நிருவாகிகள், வனவளத்திணைக்கள அதிகாரிகள், நில அளவைத்திணைக்கள அதிகாரிகள், கால்நடை சுகாதார வைத்திய திணைக்கள அதிகாரிகள், மகாவலி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், கிராம சேவகர் என பலரும் கலந்துகொண்டனர்

 

Related posts