மருதமுனை தனிமைப்படுத்தல் பிரதேச மக்களுக்குஅத்தியவசிய சேவைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

மருதமுனையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருக்கின்ற மசூர் மௌலானா வீதி தொடக்கம் நூலக வீதி வரையான பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு அத்தியவசிய சேவைகள் தங்குதடையின்றி கிடைப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
இது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று, இன்று சனிக்கிழமை (03) மாலை கல்முனை மாநகர சபையில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றது.
 
இக்கலந்துரையாடலில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி, மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.உமர் அலி, ஏ.ஆர்.அமீர், மருதமுனை ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் மெளலவி எம்.எல்.முபாறக் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
 
இதன்போது தனிமைப்படுத்தல் பிரதேசத்திற்குட்பட்ட மக்களுக்கு அத்தியவசிய உணவுப் பொருட்களை நடமாடும் விற்பனை ஊடாக விநியோகம் செய்தல், பொது அமைப்புகளின் ஊடாக நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொடுத்தல், அரசாங்க ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் தவிர்ந்த மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் உலர் உணவை விரைவாகப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் நோயாளிகளுக்கு அவசர மருத்துவ சேவைகளை வழங்குதல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.
 
அதேவேளை மாட்டிறைச்சி, கோழி இறைச்சி, மீன், மரக்கறிகள், முட்டை, பேக்கரி உணவுகள் உள்ளிட்ட அத்தியவசிய உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கான முகவர்களை உடனடியாகத் தெரிவு செய்து, சேவையில் ஈடுபடுத்துவது குறித்து கூடிய அவதானம் செலுத்தப்பட்டதுடன் இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைவாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாநகர முதல்வரினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
 
அத்துடன் மருதமுனையின் குறித்த பிரதேசத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கான ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
 

Related posts