மூக்குக்கண்ணாடிக்கான கட்டணத்தை உடன் நிறுத்தவும்

முப்பரிமாண திரைப்படங்களை பார்ப்பதற்காக திரையரங்குளில் வழங்கப்படும் விசேட மூக்குக்கண்ணாடிகளுக்கு அறவிடப்படும் மேலதிக கட்டணத்தை உடனடியாக நிறுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு பிரதமரால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

ஒருசில திரையரங்குகளின் உரிமையாளர்கள், முப்பரிமாண மூக்குக்கண்ணாடிகளுக்காக, ரசிகர்களிடம் மேலதிக கட்டணத்தை அறவிடுவதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

திரையரங்க உரிமையாளர்கள் முப்பரிமாண கண்ணாடிகளுக்கு அறவிடும் மேலதிக கட்டணம் தொடர்பில் திரைப்பட நுழைவுச்சீட்டுகளில் குறிப்பிடுவதில்லை என்ற விடயம், திரைப்படக் கூட்டுத்தாபனம் முன்னெடுத்த விசாரணைகளில் தெரியவந்ததை அடுத்து பிரதமரால் இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

முப்பரிமாண கண்ணாடிகளுக்கு மேலதிக கட்டணம் அறவிடப்படுமாயின் அதுத்தொடர்பில் திரைப்பட நுழைவுச்சீட்டுகளில் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts