யாழில் மீன்பிடி படகுகள் பதிவு ஆரம்பம்!

வடக்கு கடற்பரப்பில் இடம்பெறுகின்ற சட்டவிரோத கடத்தல்களை தடுக்கும் வகையில் மீன்பிடி படகுகள் அனைத்தையும் பதிவு செய்யும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமானது.

யாழ் மாவட்டதின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடல் மார்க்கமாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையிலும் இதுவரை பதிவு செய்யப்படாத படகுகளை பதிவு செய்யும் வகையிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சின் உயர் அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் இணைந்ததாக கடற்றொழில் நீரியல்வளத்துறையின் யாழ் மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதகாரன் கூறினார்.

இந்தக் குழுவினர் இரண்டு வாரங்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து மீன்பிடிப் படகுகளை பதிவு செய்யவுள்ளனர்.

இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் இலங்கை கடற்படையினர் வடக்கு கடற்பரப்பில் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களின்போது ஆயிரத்து 55 கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத் தவிர ஹெரொய்ன், ஐஸ், ஹஷிஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டிருந்தன.

Related posts