வங்கியில் கடன்பெறுவோருக்குச் சலுகை

இலங்கையில் கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தொழிற்துறையினருக்கு சலுகைகளை வழங்க இலங்கை மத்திய வங்கி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதனடிப்படையில் 6 மாதங்களைக் கொண்ட சலுகைக் காலம் உள்ளடங்கலாக 24 மாதங்களைக் கொண்ட மீள்கொடுப்பனவு காலப்பகுதி கடன் பெறுநர்களுக்கு வழங்கப்படும் என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

ஆண்டுக்கு 4 சதவீத வட்டிவீதத்தில் தொழிற்படு மூலதனக் கடன்களை வழங்குவதற்காக சௌபாக்யா கொவிட்-19 புத்துயிரளித்தல் கடன் திட்ட வசதியினை இலங்கை அரசாங்கத்தின் ஆலோசனையுடன் இலங்கை மத்திய வங்கி 3 கட்டங்களில் நடைமுறைப்படுத்தியிருந்தது.

இந்நிலையில், கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக எதிர்பார்க்கப்பட்டவாறு தமது தொழில்களை சீரமைத்துக்கொள்வதில் அநேகமான கடன்பெறுநர்கள் இடர்பாடுகளை எதிர்கொண்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி கடன்பெறுநர்கள் இந்நிலைமைகளை எதிர்கொள்வதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்துவதற்கு மத்திய வங்கி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கு கடன்பெறுநர்கள் எழுத்து மூலமான கோரிக்கையினை முன்வைப்பதன் மூலம் தமக்கான சலுகைக் காலத்தினை நீடித்துக் கொள்ள முடியும் என மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.

சுற்றுலா, விவசாயம், கட்டுமானம், உணவு உற்பத்தி ஆகிய தொழிற்துகைள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகர்கள் உள்ளிட்டவர்கள் குறித்த சலுகைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts