வடிகான் மூடி போடப்படாவிட்டால் விபத்துக்கள் அதிகமாகும்!வீதிப் பொறியியலாளரிடம் தவிசாளர் ஜெயசிறில் வலியுறுத்து.

காரைதீவில் ஜ றோட் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட வீதி வடிகான்களுக்கு மூடிகள் இல்லாமையினால் இதுவரை 11விபத்துக்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆழமான வடிகான்கள் திறந்திருக்கின்ற காரணத்தினால் மேலும் விபத்துக்கள் இடம்பெற வாய்ப்புகள் அதிகம். எனவே வீதி முடிவுறும் இந்த இறுதித்தறுவாயிலாவது மூடிகளிட்டு எமது மக்களைக் காப்பாற்றவேண்டும் என காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கே.ஜெயசிறில் வீதிஅபிவிருத்தித்திணைக்கள ஜ றோட் திட்டப் பொறியியலாளர் உவைஸிடம் வேண்டுகோள்விடுத்தார்.
 

காரைதீவில் இத்திட்டத்தின்கீழ் கார்ப்பட் இடப்பட்டு செப்பனிடப்பட்ட விபுலாநந்தா மத்தியகல்லூரி வீதி மற்றும் தேசிகர் வீதிகளை கையளிப்பதற்கு முன்னரான சந்திப்பு நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.

திட்டப்பொறியியலாளரிடம் தவிசாளர் மேலும் கூறுகையில்:
இறுதிச் சந்தர்ப்பத்தில் எங்களை அழைத்து கலந்துரையாடுவது போன்று வீதிஅமைக்கும் முன்னர் மக்கள் பிரதிpதிகளாகிய எங்களையும் துறைசார் புத்திஜீவிகளையும் அழைத்து கலந்துரையாடியிருந்தால் இன்று நிலவுகின்ற பிரச்சினைகள் குறைபாடுகள் தோன்றியிருக்காது.

தேசிகர் வீதியமைக்கையில் பொதுமக்கள் தெரிவித்த முறைப்பாட்டிற்கமைய நான் வந்து வீதியின் இருமருங்கிலும் கிறவல் போடுவதிலுள்ள நடைமுறைச்சிக்கைலயும் ஒருபக்கமாவது வடிகான்வரை கார்ப்பட் இடப்படவேண்டுமெனவும்  மாகாணப்பணிப்பாளர் பத்மராஜாவிடம் கேட்டுக்கொண்டபோது அவர் அதனைச்செய்துதந்தார்.
 
அப்படி இங்குள்ள பிரதேச பொறியியலாளர் ஆரம்பத்திலும் இடையிலும் பேசியிருந்தால் பொதுமக்கள் முறைப்பாடுகளைத் தவிர்த்திருக்கலாம். மைதானம் மற்றும் விபுலாநந்தா மத்திய கல்லூரியின் முன்னாலுள்ள வீதியில் நிலவும் குறைபாடுகளையும் வடிகான் மூடிகளையும் போட்டுநிவர்த்திக்கவேண்டும் என்றார்.
 
பொறியியலாளர் உவைஸ் பதிலளிக்கையில் வீதிநிருமாணப்பணிகள் நிறைவுற்றாலும் எதிர்வரும் 3மாதங்களுக்கு அவற்றை நாம் பராமரிப்போம்.அந்தக்காலப்பகுதிக்குள் எம்மால் முடிந்தவைகளை தவிசாளர்கேட்டக்கொண்டதற்கிணங்க செய்துதரமுயற்சிக்கிறோம் என்றார்.

Related posts